மனைவி, 3 குழந்தைகள் உள்பட 5 பேர் கொலை, தொழிலாளிக்கு தூக்கு தண்டனை - ஒசப்பேட்டே கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு


மனைவி, 3 குழந்தைகள் உள்பட 5 பேர் கொலை, தொழிலாளிக்கு தூக்கு தண்டனை - ஒசப்பேட்டே கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
x
தினத்தந்தி 4 Dec 2019 9:30 PM GMT (Updated: 4 Dec 2019 7:20 PM GMT)

பல்லாரியில் மனைவி, 3 குழந்தைகள் உள்பட 5 பேரை கொலை செய்த தொழிலாளிக்கு தூக்கு தண்டனை விதித்து ஒசப்பேட்டே கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு கூறியுள்ளது.

பெங்களூரு, 

பல்லாரி மாவட்டம் கம்பிளி தாலுகா ஜப்பரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் பைலூரு திப்பையா, தொழிலாளி. இவரது மனைவி பகீரம்மா. இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் இருந்தனர். பகீரம்மாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு, பைலூரு திப்பையா அடிக்கடி சண்டை போட்டு வந்ததாக தெரிகிறது. கடந்த 2017-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25-ந் தேதி இரவு மதுஅருந்திவிட்டு குடிபோதையில் பைலூரு திப்பையா வீட்டுக்கு வந்தார். அப்போது தனது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவர் சண்டை போட்டார். பின்னர் திடீரென்று ஆத்திரமடைந்த பைலூரு திப்பையா வீட்டில் கிடந்த அரிவாளை எடுத்து மனைவி பகீரம்மாவை சரமாரியாக வெட்டினார்.

இதனை தடுக்க வந்த, பகீரம்மாவின் சகோதரி கங்கம்மாவையும் வெட்டினார். மேலும் குடிபோதையில் தனது 3 குழந்தைகளையும் அரிவாளால் பைலூரு திப்பையா வெட்டினார். இதில், பகீரம்மா, அவரது 3 குழந்தைகள், பகீரம்மாவின் சகோதரி கங்கம்மா ஆகிய 5 பேரும் உயிர் இழந்தார்கள். குடிபோதையில் மனைவி, 3 குழந்தைகள் உள்பட 5 பேரையும் தொழிலாளி படுகொலை செய்த சம்பவம் பல்லாரி மட்டும் இன்றி கர்நாடகம் முழுவதும் 2017-ம் ஆண்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதுகுறித்து கம்பிளி போலீசார் வழக்குப்பதிவு செய்து பைலூரு திப்பையாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

5 பேர் கொலை செய்யப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணை ஒசப்பேட்டே 3-வது கூடுதல் குற்றவியல் கோர்ட்டில் நீதிபதி ராஜசேகர் முன்னிலையில் நடைபெற்று வந்தது. பைலூரு திப்பையா மீது கம்பிளி போலீசார் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கின் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, 5 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் நேற்று நீதிபதி ராஜசேகர் தீர்ப்பு கூறினார்.

அப்போது மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, குடிபோதையில் மனைவி, 3 குழந்தைகள் மற்றும் மனைவியின் சகோதரி ஆகிய 5 பேரை பைலூரு திப்பையா கொலை செய்தது ஆதாரத்துடன் நிரூபணமாகி இருப்பதால், அவருக்கு தூக்கு தண்டனை விதிப்பதாக தீர்ப்பு கூறினார். 5 பேர் கொலை வழக்கில் தொழிலாளிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு இருப்பது பல்லாரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story