நெல்லையில் மழைக்கு 4 வீடுகள் இடிந்து சேதம்


நெல்லையில் மழைக்கு 4 வீடுகள் இடிந்து சேதம்
x
தினத்தந்தி 4 Dec 2019 10:00 PM GMT (Updated: 4 Dec 2019 8:07 PM GMT)

நெல்லையில் மழைக்கு 4 வீடுகள் இடிந்து சேதம் அடைந்தன.

நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் கடந்த 10 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான சாலைகள் சேதம் அடைந்து குண்டும், குழியுமாகவும், சேறும் சகதியுமாகவும் மக்கள் செல்லமுடியாத நிலையில் உள்ளது. சாலைகளிலும், தெருக்களிலும் மழைநீர் தேங்கி கிடக்கின்றன.

நெல்லை மாநகர பகுதியில் பெய்த மழையால் ரோடுகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. பாளையங்கோட்டை பகுதியில் உள்ள கல்லூரி விளையாட்டு மைதானத்தில் மழை நீர் குளம் போல் தேங்கி கிடக்கிறது. ராமையன்பட்டி, வேப்பங்குளம், நெல்லை டவுன், பழையபேட்டை பகுதிகளில் குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீர் புகுந்ததால், மக்கள் வீடுகளுக்கு செல்வதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். மழைநீருடன் கழிவுநீரும் தேங்கி சாலையில் கிடப்பதால் குடிதண்ணீர் பிடிக்க முடியவில்லை. நெல்லை மாநகர பகுதிக்கு குடிநீர் வினியோகம் செய்யக்கூடிய உறைகிணறுகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளதால் குடிநீர் வினியோகம் பல இடங்களுக்கு வழங்கப்படவில்லை. இதனால் குடிநீர் இல்லாமல் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

நெல்லையில் பெய்த தொடர் மழையால் கரையிருப்பு ஆர்.எஸ்.ஏ.நகரில் உள்ள பார்வதி, கணபதி, பண்டாரம், ஜெகநாதன் ஆகிய 4 பேரின் வீடுகள் நேற்று காலையில் இடிந்து விழுந்தன. வீடுகள் இடிந்து விழுந்த நேரத்தில் வீட்டில் யாரும் இல்லாததால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த வருவாய்த்துறையினர் நேற்று அந்த பகுதிக்கு சென்று இடிந்த வீடுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இந்த தொடர் மழைக்கு இதுவரை நெல்லை மாவட்டத்தில் மொத்தம் 225 வீடுகள் இடிந்து சேதம் அடைந்து உள்ளன. வீடுகளை இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு வருவாய்த்துறையினர் கணக்கெடுப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Next Story