தொடர் மழையால் சிவகிரி பகுதியில் வீடுகள் இடிந்து சேதம்


தொடர் மழையால் சிவகிரி பகுதியில் வீடுகள் இடிந்து சேதம்
x
தினத்தந்தி 4 Dec 2019 10:00 PM GMT (Updated: 4 Dec 2019 8:07 PM GMT)

தொடர் மழையால் சிவகிரி பகுதியில் வீடுகள் இடிந்து சேதம் அடைந்தன.

சிவகிரி, 

சிவகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது. இதனால் தேவிபட்டினம், ராயகிரி, விஸ்வநாதப்பேரி, வடுகப்பட்டி பகுதிகளில் ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. ஒரு சில குளங்கள் நிரம்பியும், சில குளங்கள் நிரம்பும் தருவாயிலும் உள்ளன.

சிவகிரி அருகே ராயகிரி நேரு தெருவை சேர்ந்தவர் மகாலிங்கம். இவருக்கு சொந்தமான குடிசை வீட்டின் மண் சுவர்கள் மழையால் இடிந்து விழுந்தன. சிவராமலிங்கபுரம் தெற்கு தெருவை சேர்ந்த கணேசன், வடுகப்பட்டி மெயின்ரோட்டை சேர்ந்த கருப்பசாமி ஆகியோரின் ஓட்டு வீட்டின் சுவர்களும் இடிந்து விழுந்தன. இதுகுறித்து தகவல் அறிந்த சிவகிரி தாசில்தார் கிரு‌‌ஷ்ணவேல், வருவாய் ஆய்வாளர் முத்துக்குமார், கிராம நிர்வாக அலுவலர் வீரசேகரன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து சேதமடைந்த வீடுகளை பார்வையிட்டனர்.

விக்கிரமசிங்கபுரம் அருகே சிவந்திபுரம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட காமராஜர் நகர் அருகே சின்னசங்கரன்கோவில் இணைப்பு சாலை உள்ளது. இந்த சாலையில் உள்ள பாலம் தற்போது பெய்த தொடர் மழையால் நேற்று உடைந்தது. இதனால் அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழியாக வேறு வாகனங்கள் சென்றுவிடக்கூடாது என்பதற்காக அப்பகுதி மக்கள் இந்த பகுதியில் கற்களை அடுக்கியும், முட்செடிகளை வெட்டி போட்டும் உள்ளனர். இந்த பாலத்தை அதிகாரிகள் உடனே சரிசெய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Next Story