கொரடாச்சேரி அருகே பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு


கொரடாச்சேரி அருகே பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 5 Dec 2019 10:30 PM GMT (Updated: 5 Dec 2019 6:57 PM GMT)

கொரடாச்சேரி அருகே பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி சீரமைக்கப்படுமா? என பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.

கொரடாச்சேரி,

கொரடாச்சேரி ஒன்றியம், அம்மையப்பன் பகுதியை சேர்ந்த பஞ்சாந்தோப்பு பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இதன் மூலம் அந்த பகுதியை சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பராமரிப்பின்றி பழுதடைந்து காணப்படுகிறது. இந்த தொட்டியின் தூண்களில் சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுந்து காட்சி அளிக்கிறது.

மேலும் இந்த நீர்த்தேக்க தொட்டியின் இரும்பு ஏணி கஜா புயலின்போது காற்றின் வேகத்தில் கீழே விழுந்தது. இதனை சரி செய்யாத காரணத்தினால் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சுத்திகரிப்பு செய்ய முடியாமல் உள்ளது. இதனால் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேல் சுத்திகரிக்கப்படாத, சுகாதாரமற்ற குடிநீரையே அந்த பகுதி பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

சீரமைக்க வேண்டும்

இந்த தொட்டி 60 ஆயிரம் லிட்டர் நீர்த்தேக்க திறன் கொண்டது. ஆனால் பழுதடைந்த காரணத்தால் 30 ஆயிரம் லிட்டர் தண்ணீரே ஏற்றப்படுகிறது. இதனால் மின் வினியோகம் தடை செய்யப்படும் நாட்களில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. சுத்தம் செய்ய இயலாத காரணத்தால் பொதுமக்கள் உபயோகிக்கும் நேரம் மட்டுமே நீர் நிரப்பப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த பகுதி பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர்.



Next Story