ஆயுதப்படை போலீஸ்காரர் எலி மருந்து தின்று தற்கொலை முயற்சி நாகையில் பரபரப்பு


ஆயுதப்படை போலீஸ்காரர் எலி மருந்து தின்று தற்கொலை முயற்சி நாகையில் பரபரப்பு
x
தினத்தந்தி 5 Dec 2019 11:15 PM GMT (Updated: 5 Dec 2019 7:07 PM GMT)

நாகையில், ஆயுதப்படை போலீஸ்காரர் ஒருவர் எலி மருந்து தின்று தற்கொலைக்கு முயன்றார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாகப்பட்டினம்,

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகா பண்ணந்தூர் பகுதியை சேர்ந்தவர் முத்து(வயது25). நாகை ஆயுதப்படை பிரிவில் 2-ம் நிலை போலீஸ்காரராக பணியாற்றி வரும் இவர், நாகை ஆயுதப்படை காவலர் குடியிருப்பில் தங்கி உள்ளார்.

நேற்று முன்தினம் முத்து திட்டச்சேரி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி விட்டு நேற்று காலை நாகையில் உள்ள ஆயுதப்படை காவலர் குடியிருப்பிற்கு வந்தார்.

தற்கொலை முயற்சி

அப்போது முத்து திடீரென மயங்கி விழுந்தார். இதையடுத்து அங்கிருந்த சக போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு முத்துவை டாக்டர்கள் பரிசோதனை செய்தனர். அப்போது அவர் தற்கொலை செய்து கொள்வதற்காக எலி மருந்தை (வி‌‌ஷம்) தின்றது தெரிய வந்தது.

போலீசார் விசாரணை

இதைத்தொடர்ந்து அவர் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து வெளிப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்து எதற்காக தற்கொலைக்கு முயன்றார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆயுதப்படை போலீஸ்காரர் எலி மருந்து தின்று தற்கொலை முயற்சியில் ஈடுபட முயன்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story