திருவாடானை பகுதியில் பிடிபட்ட கொள்ளையர்களிடம், 250 கிராம் நகைகள்- ரூ.5¼ லட்சம் மீட்பு


திருவாடானை பகுதியில் பிடிபட்ட கொள்ளையர்களிடம், 250 கிராம் நகைகள்- ரூ.5¼ லட்சம் மீட்பு
x
தினத்தந்தி 5 Dec 2019 10:15 PM GMT (Updated: 5 Dec 2019 8:25 PM GMT)

திருவாடானை அருகே நடைபெற்ற கொள்ளை சம்பவத்தில் குற்றவாளிகளிடம் இருந்து 250 கிராம் நகைகள் மற்றும் ரூ.5¼ லட்சம் ரொக்கம் ஆகியவற்றை போலீசார் மீட்டனர்.

தொண்டி,

ராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, மங்கலக்குடி அருகே உள்ள பெருவாக்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் கருப்பையா. வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சாரதா (வயது 58) மட்டும் பெருவாக்கோட்டை கிராமத்தில் சொந்த வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில் சம்பவத்தன்று சாரதா வெளியூர் சென்றதை அறிந்த மர்ம நபர்கள் அவரது வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்த சுமார் 70 பவுன் நகைகள், மற்றும் ரூ.15,000 ரொக்கத்தை கொள்ளையடித்துச் சென்று விட்டனர்.

இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன் தலைமையிலான தனிப்படை போலீசார் குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில் இது தொடர்பாக பெருவாக்கோட்டை கிராமத்தில் வசித்துவரும் சிவகங்கை மாவட்டம் கரிசல்பட்டியை சேர்ந்த முகமது அப்பாஸ் (32), அவரது மருமகன் மதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த யாசர் அராபத் (20) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர்கள் தங்களது கூட்டாளிகளுடன் சேர்ந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். மேலும் இவர்கள் அளித்த தகவலின் பேரில் கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய அருப்புக்கோட்டை சிலோன் காலனியை சேர்ந்த மோகன், மதுரை ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த ஹரி, மதுரை வில்லாபுரம் எம்.எம்.எஸ். காலனி ராமச்சந்திரன் என்ற குள்ளி ராமச்சந்திரன் ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் இவர்கள் அனைவரும் திருவாடானை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிபதி உத்தரவின் பேரில் ராமநாதபுரம் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதனிடையே கொள்ளையர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சாரதாவின் வீட்டில் நகைகளை திருடிச் சென்றதும், அந்த நகைகளை மதுரை வில்லாபுரம் எம்.எம்.எஸ் காலனியை சேர்ந்த ராமச்சந்திரன் என்ற குள்ளி ராமச்சந்திரனிடம் விற்பதற்காக கொடுத்திருந்ததும் தெரியவந்தது. அதனை தொடர்ந்து ஹரி தவிர மற்ற 4 பேரையும் திருவாடானை போலீசார் காவலில் எடுத்து சேலம், மதுரை, அருப்புக்கோட்டை, பெருவாக்கோட்டை ஆகிய இடங்களுக்கு அழைத்து சென்று அங்கு அவர்கள் பதுக்கி வைத்து இருந்த 250 கிராம் நகைகள் மற்றும் பணத்தை கைப்பற்றினர்.

இதுதவிர திருவாடானை போலீஸ் நிலையத்தில் பதிவான ஒரு திருட்டு வழக்கில் 2 பவுன் நகையும், எஸ்.பி.பட்டினம் போலீஸ் நிலையத்தில் பதிவான ஒரு திருட்டு வழக்கில் 5 பவுன் தங்க நகையையும் இவர்களிடமிருந்து பறிமுதல் செய்தனர்.அதனைத் தொடர்ந்து இந்த 4 பேரையும், இவர்களிடம் கைப்பற்றப்பட்ட ரூ.5 லட்சத்து 21 ஆயிரம், 250 கிராம் நகைகள் ஆகியவற்றை திருவாடானை கோர்ட்டில் நீதிபதி பாலமுருகன் முன்பு போலீசார் ஒப்படைத்தனர்.

Next Story