மருத்துவமனைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் ஊழியர் சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்


மருத்துவமனைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் ஊழியர் சங்க கூட்டத்தில் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 7 Dec 2019 11:00 PM GMT (Updated: 7 Dec 2019 2:46 PM GMT)

மருத்துவமனைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று அரசு மருத்துவத்துறை ஊழியர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பெரம்பலூர்,

தமிழ்நாடு அரசு மருத்துவத்துறை ஊழியர் சங்கத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் நேற்று பெரம்பலூர் சங்குப்பேட்டையில் நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் மாநில தலைவர் அன்பழகன் தலைமை தாங்கினார். சங்கத்தின் சட்ட ஆலோசகர் மோகன், கவுரவ தலைவர் அர்ஜூனன், நிர்வாக செயலாளர் நாகேஸ்வரராவ், பொதுச் செயலாளர் சுகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிதி நிலை அறிக்கையை பொருளாளர் சாமுண்டி வாசித்தார்.

கூட்டத்தில் சுகாதாரத்துறையில் அனைத்து இயக்குனர்களின் கண்காணிப்பிலுள்ள அரசு மருத்துவமனைகளில் உள்ள அடிப்படை பணியாளர்களான துப்புரவு பணியாளர்கள், மருத்துவமனை பணியாளர்கள், ஆண், பெண் செவிலியர்களின் உதவியாளர்கள், அறுவை அரங்க உதவியாளர்கள், மயக்கவியல் உதவியாளர்கள், மாவு கட்டுனர்கள் உள்ளிட்ட பணிகளில் உள்ள காலிப்பணியிடங்களை தமிழக அரசு நிரப்ப வேண்டும். மேலும் மருத்துவமனைகளில் அடிப்படை பணியாளர்களுக்கு 5 ஆண்டுகளில் தகுதியுடைய பதவி உயர்வுகளை வழங்க வேண்டும்.

மருத்துவமனைகளுக்கு தேவைப்படும் அடிப்படை பணியாளர்களை வேலை வாய்ப்பு அலுவலகம் மூலம் தேர்வு செய்து, அவர்களை தொகுப்பூதியத்தில் அரசு நியமனம் செய்ய வேண்டும். மருத்துவமனைகளில் புதிய பணியிடங்கள் உருவாக்கும் போது இந்திய மருத்துவ கவுன்சிலின் வழிகாட்டுதல்களை அரசு கடைபிடிக்க வேண்டும். 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் பல்நோக்கு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் தமிழ்நாடு அரசு மருத்துவத்துறை ஊழியர் சங்கத்தின் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக சங்கத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் ராஜகோபால் வரவேற்றார். முடிவில் சங்கத்தின் பிரசார செயலாளர் ராஜே‌‌ஷ்கண்ணா நன்றி கூறினார். மாநில பொதுக்குழு கூட்டம் தொடங்குவதற்கு முன்பு பெரம்பலூர் மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சங்கத்தின் கொடியேற்றப்பட்டது. பின்னர் அங்கிருந்து அவர்கள் ஊர்வலமாக பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற சங்குப்பேட்டைக்கு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story