பட்டதாரி பெண் மர்ம சாவு: கணவர் குடும்பத்தினரை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல்


பட்டதாரி பெண் மர்ம சாவு: கணவர் குடும்பத்தினரை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 7 Dec 2019 11:00 PM GMT (Updated: 7 Dec 2019 3:27 PM GMT)

பட்டதாரி பெண் மர்மமான முறையில் இறந்ததை கண்டித்து, அவரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் பெண்ணை கணவர் குடும்பத்தினர் அடித்துக் கொலை செய்திருக்கலாம் என்று போலீசாரிடம் புகார் தெரிவித்தனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா வெங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி. இவரது மகள் பிரேம சத்தியா(வயது 28). பட்டதாரியான இவரை, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு ஆலத்தூர் தாலுகா பாடாலூர் கிராமத்தை சேர்ந்த அய்யாத்துரை மகன் திருமுருகன் என்பவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை. இந்நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் பிரேம சத்தியா மயங்கிய நிலையில் கிடந்ததாக கூறப்படுகிறது. இதனை கண்ட அவரது கணவர் திருமுருகன் பிரேம சத்தியாவை மீட்டு சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தாராம். ஆனால் அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் பிரேம சத்தியா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியதை தொடர்ந்து, திருமுருகன் அங்கிருந்து தலைமறைவாகி விட்டாராம். இது தொடர்பாக பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரேம சத்தியா எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

சாலை மறியல்

இந்நிலையில் நேற்று பெரம்பலூர் அரசு மருத்துவமனை பிரேத கூடத்தில் கூடியிருந்த பிரேம சத்தியாவின் பெற்றோர், உறவினர்கள் திடீரென்று பெரம்பலூர்- ஆத்தூர் சாலையில் காமராஜர் வளைவில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது பிரேம சத்தியாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போலீசாரிடம் கூறுகையில், பிரேம சத்தியா சம்பவத்தன்று காலையில் தந்தை பெரியசாமிக்கு செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது பிரேம சத்தியா மாமியார் தூண்டுதலின் பேரில் திருமுருகன் என்னிடம் சண்டை போட்டு, அடித்து துன்புறுத்தி வருவதாக தெரிவித்து விட்டு போனை வைத்து விட்டார். மேலும் பிரேம சத்தியாவின் கழுத்தில் காயங்கள் இருக்கிறது. இதனால் பிரேம சத்தியாவை, அவரது கணவர் திருமுருகன் மற்றும் மாமனார், மாமியார், திருமுருகனின் அண்ணன், அண்ணி ஆகியோர் தான் அடித்துக் கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டுள்ளனர். எனவே அவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

கோட்டாட்சியர் விசாரணை

இதையடுத்து போலீசார் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதை தொடர்ந்து அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதையடுத்து மறியல் போராட்டத்தால் பாதிக்கப்பட்டிருந்த போக்குவரத்தை போலீசார் ஒழுங்குபடுத்தினர். இறந்த பிரேம சத்தியாவிற்கு திருமணமாகி 4 ஆண்டுகளே ஆவதால் பெரம்பலூர் வருவாய் கோட்டாட்சியரும் விசாரணை நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story