ரே‌‌ஷன் கடைகள் மூலம் வெங்காயம் விற்பனை செய்ய நடவடிக்கை அமைச்சர் காமராஜ் பேட்டி


ரே‌‌ஷன் கடைகள் மூலம் வெங்காயம் விற்பனை செய்ய நடவடிக்கை அமைச்சர் காமராஜ் பேட்டி
x
தினத்தந்தி 7 Dec 2019 11:00 PM GMT (Updated: 7 Dec 2019 6:55 PM GMT)

ரே‌‌ஷன் கடைகள் மூலம் வெங்காயம் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் காமராஜ் கூறினார்.

மன்னார்குடி,

திருவாரூர் மாவட்டம, மன்னார்குடியில் மாற்றுக்கட்சியினர் அ.தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாற்றுக்கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் அமைச்சர் காமராஜ் முன்னிலையில் அ.தி.மு.க.வில் தங்களை இணைத்து கொண்டனர்.

பின்னர் அமைச்சர் காமராஜ், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விலை உயர்வு தற்காலிகம்

வெங்காயம் விளைகின்ற பகுதிகளில் மழை கூடுதலாக பெய்துள்ளதால் தற்போது விளைச்சல் பாதிப்பு ஏற்பட்டு விலை ஏற்றம் கண்டுள்ளது. இந்த விலை உயர்வு தற்காலிகமானது.

தமிழகத்தில் உள்ள பசுமை பண்ணை கடைகளில் தமிழக அரசு வெங்காயத்தை கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்து வருகிறது.

ரே‌‌ஷன் கடைகளில் வெங்காயம் விற்பனை

இந்த நிலையில் மத்திய அரசு துருக்கி, எகிப்து போன்ற நாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்து விலை ஏற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளது. அந்த வெங்காயம் வருகிற 12, 13-ந்தேதிகளில் தமிழகத்திற்கு வந்தடையும். அதனை தமிழகத்தில் உள்ள 5 முதல் 6 ஆயிரம் ரே‌‌ஷன் கடைகளில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதனை கூட்டுறவுத்துறை அமைச்சரும் உறுதிப்படுத்தியுள்ளார். இத்தகைய நடவடிக்கைகளால் தற்காலிகமாக ஏற்பட்டுள்ள வெங்காய விலை ஏற்றத்தை சமாளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. வெற்றி பெறும்

உள்ளாட்சி தேர்தலில் தோற்று விடுவோம் என்ற பயத்தில் தி.மு.க.வும், அதன் கூட்டணி கட்சிகளும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்கள். அந்த வழக்கில் கிடைத்திருக்கின்ற தீர்ப்பின் மூலம் நீதி வெற்றி அடைந்துள்ளது. உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க. நிச்சயம் வெற்றி பெறும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது முன்னாள் நகரசபை தலைவர் சிவா.ராஜமாணிக்கம், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் பொன்.வாசுகிராம், மன்னார்குடி மேற்கு ஒன்றிய செயலாளர் தமிழ்செல்வம் ஆகியோர் உடன் இருந்தனர்.

Next Story