டி.என்.பாளையம் அருகே, மொபட்டில் சென்ற கல்லூரி மாணவியிடம் தங்க சங்கிலி பறிப்பு


டி.என்.பாளையம் அருகே, மொபட்டில் சென்ற கல்லூரி மாணவியிடம் தங்க சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 7 Dec 2019 10:15 PM GMT (Updated: 7 Dec 2019 9:05 PM GMT)

டி.என்.பாளையம் அருகே மொபட்டில் சென்ற மாணவியிடம் மர்ம நபர்கள் தங்க சங்கிலி பறித்து சென்றார்கள். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

டி.என்.பாளையம், 

டி.என்.பாளையம் அருகே உள்ள ஏழூர் மாதா கோவில் வீதியை சேர்ந்தவர் ராஜன். இவருடைய மகள் சுவேதா (வயது 19). கோபி கலை அறிவியல் கல்லூரியில் பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இந்தநிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் கல்லூரி முடிந்து மொபட்டில் கோபியில் இருந்து ஏழூருக்கு சுவேதா சென்றுகொண்டு இருந்தார்.

வாணிப்புத்தூர்மேடு என்ற இடத்தில் சென்றபோது, மொபட்டை பின்தொடர்ந்து ஒரு மோட்டார்சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்துகொண்டு இருந்தார்கள். அவர்கள் முகத்தையும் துணியால் மறைத்து கட்டியிருந்தார்கள்.

இந்தநிலையில் திடீரென அவர்கள் மொபட்டை மறித்து சுவேதா கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்துக்கொண்டு மோட்டார்சைக்கிளில் மின்னலாய் மறைந்துவிட்டார்கள். சுவேதா திருடன் திருடன் என்று கத்தினார். ஆனால் அங்கு யாரும் இல்லாததால் கொள்ளையர்களை பிடிக்க முடியவில்லை.

மேலும் அவர்கள் சென்ற மோட்டார்சைக்கிளின் நம்பர் பிளேட்டை துணியால் மூடி கட்டியிருந்தார்கள். அதனால் அதையும் சுவேதாவால் கவனிக்க முடியவில்லை.

இதுபற்றிய புகாரின் பேரில் பங்களாப்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கல்லூரி மாணவியிடம் நகை பறித்த கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

டி.என்.பாளையம் மற்றும் பங்களாப்புதூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோவில்களில் உண்டியல பணம் கொள்ளையடிக்கப்பட்டது. அதனால் கோவில் கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களே சுவேதாவிடமும் நகையை பறித்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

தொடர் கொள்ளை, வழிப்பறி சம்பவங்கள் அந்த பகுதி மக்களையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Next Story