சத்தியமங்கலத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்


சத்தியமங்கலத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 9 Dec 2019 10:45 PM GMT (Updated: 9 Dec 2019 4:42 PM GMT)

சத்தியமங்கலத்தில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சத்தியமங்கலம், 

சத்தியமங்கலம் காந்திநகரில் அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே தனியாருக்கு சொந்தமான இடம் உள்ளது. இந்த இடத்தில் டாஸ்மாக் கடை அமைக்க கடந்த சில நாட்களுக்கு முன்பு பணிகள் நடைபெற்றது.

இதுபற்றி அறிந்ததும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கு திரண்டனர். டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி அதன் முன்பு உட்கார்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்கள்.

உடனே சத்தியமங்கலம் போலீசார் அங்கு சென்று பொதுமக்களிடம், இதுதொடர்பாக சத்தியமங்கலம் தாசில்தார் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணலாம் என்று கூறினர். இதனால் சமாதானம் அடைந்த பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

இந்த நிலையில் டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி உள்ளாட்சி தேர்தலை புறக்கணிப்பதாகவும், 9-ந் தேதி சாலை மறியல் நடத்தப்போவதாகவும் துண்டுபிரசுரம் அச்சடித்து பொதுமக்கள் வினியோகம் செய்திருந்தனர்.

அதன்படி நேற்று காலை 10 மணி அளவில் சத்தி-கோவை ரோட்டில் உள்ள எஸ்.ஆர்.டி. கார்னரில் ஆண்கள், பெண்கள் என ஏராளமானோர் திரண்டனர். பின்னர் அவர்கள் அனைவரும் ரோட்டில் உட்கார்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் சத்தியமங்கலம் தாசில்தார் கணேசன், துணை போலீஸ் சூப்பிரண்டு சுப்பையா, சத்தியமங்கலம் கிராம நிர்வாக அதிகாரி தவசியப்பன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

அப்போது பொதுமக்கள் கூறும்போது, ‘குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கப்பட்டால் மது பிரியர்களால் பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இடையூறு ஏற்படும். எனவே டாஸ்மாக் கடையை திறக்கக்கூடாது. அதற்காக அமைக்கப்பட்ட தகர கொட்டகையை அகற்ற வேண்டும்’ என்றனர்.

அதற்கு அதிகாரிகள், ‘டாஸ்மாக் கடையை உங்கள் பகுதியில் திறக்கமாட்டோம். அதற்காக போடப்பட்ட தகர கொட்டகை அகற்றப்படும்’ என்றனர்.

அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் சத்தி-கோவை ரோட்டில் சுமார் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story