உள்ளாட்சி தேர்தலை நேரடியாக நடத்த தைரியம் உள்ளதா? எடப்பாடி பழனிசாமிக்கு, கே.எஸ்.அழகிரி சவால்


உள்ளாட்சி தேர்தலை நேரடியாக நடத்த தைரியம் உள்ளதா? எடப்பாடி பழனிசாமிக்கு, கே.எஸ்.அழகிரி சவால்
x
தினத்தந்தி 9 Dec 2019 11:15 PM GMT (Updated: 9 Dec 2019 6:58 PM GMT)

உள்ளாட்சி தேர்தலை நேரடியாக நடத்த தைரியம் உள்ளதா? என எடப்பாடி பழனிசாமிக்கு கே.எஸ்.அழகிரி சவால் விடுத்துள்ளார்.

நாகர்கோவில்,

தமிழகத்தில் அ.தி.மு.க. அரசு அறிவித்துள்ள உள்ளாட்சித் தேர்தல் சட்டத்திற்கு புறம்பான தேர்தல் என்று நாங்கள் கருதுகிறோம். தாழ்த்தப்பட்டவர்கள், பெண்களுக்கான இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை. இதை நாங்கள் பலமுறை சொல்லியும்கூட மாநில அரசு இதில் கவனம் செலுத்தவில்லை. மாநில தேர்தல் ஆணையமும் கவனம் செலுத்தவில்லை.எனவே தான் முறையாக தேர்தலை நடத்த வேண்டும் என்பதற்காக தி.மு.க. சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அவர்களுடைய கோரிக்கைகளை ஏற்று சுப்ரீம் கோர்ட்டு சில வழிகாட்டுதல் நெறிமுறைகளை தந்துள்ளது. ஆனால் அந்த வழிகாட்டுதல்களை தமிழ்நாடு தேர்தல் ஆணையம் சரியாக பின்பற்றாத காரணத்தால் மீண்டும் தி.மு.க. சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்றிருக்கிறது.

முறையாக நடத்த வேண்டும்

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பில் நாங்களும் சுப்ரீம் கோர்ட்டில் ஒரு முறையீடு செய்கிறோம். எங்களுக்காக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரமும், கபில் சிபலும் சுப்ரீம் கோர்ட்டில் வாதாட தயாராக இருக்கிறார்கள். எங்கள் கட்சியின் பொதுச்செயலாளர் செல்வம் அதற்காக டெல்லி சென்று முறையீட்டு மனுவை தாக்கல் செய்கிறார். எனவே நாங்களும் சுப்ரீம் கோர்ட்டுக்கு் சென்றிருக்கிறோம் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.எனவே தேர்தலை நடத்த வேண்டும் என்றுதான் எங்களது கூட்டணி சொல்கிறதே தவிர தேர்தல் கூடாது என்று சொல்லவில்லை. ஆனால் தேர்தலை முறையாக நடத்த வேண்டும் என்று சொல்கிறோம்.

குற்றச்சாட்டு தவறு

உள்ளாட்சி தேர்தலை சந்திக்க தி.மு.க. தயங்குகிறது என்ற முதல்-அமைச்சரின் குற்றச்சாட்டு தவறானது. முதல்-அமைச்சர் அச்சத்தின் காரணமாகத்தான் இந்த தேர்தலை தவறான வழிகளில் வழிநடத்துகிறார். உள்ளாட்சித் தேர்தல் மக்கள் நேரடியாக பங்கேற்கும் தேர்தலாக இருக்க வேண்டும். மறைமுக தேர்தல் ஆக இருக்கக்கூடாது. மக்களின் நேரடி பங்களிப்பு இல்லாமல் மக்களின் பிரதிநிதிகளை வைத்து மேயரை தேர்ந்தெடுப்பது சரியான வழிமுறை கிடையாது. அது யாருக்கு ஆள்பலம், அதிகார பலம், பண பலம் இருக்கிறதோ அவர்கள்தான் அதில் வெற்றி பெற முடியும்.

நேரடியாக மேயரை, நகரசபை தலைவரை, ஊராட்சி ஒன்றிய தலைவரை மக்கள் தேர்ந்ெதடுக்கும் வாய்ப்பை தமிழக அரசு பறிக்கிறது. முதல்-அமைச்சருக்கு தைரியம் இருந்தால் நேரடி தேர்தலை அறிவிக்கச் சொல்லுங்கள். நாங்கள் எப்படி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றோமோ? அதேபோல் நேரடி தேர்தல் என்றால் எல்லா இடங்களிலும் தமிழகத்தில் நாங்கள் வெற்றி பெறுவோம். அ.தி.மு.க.வால் வெற்றி பெறமுடியாது. மறைமுக தேர்தலை தி.மு.க. கொண்டு வந்தது என்று சொல்கிறார்கள் என்றால் அவர்கள் ஒரு தவறு செய்தால் அதே தவறை அ.தி.மு.க.வும் செய்யுமா?இவ்வாறு அவர் கூறினார். 

Next Story