கரூர் மாவட்டத்தில் 1,685 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு வேட்பு மனுதாக்கல் தொடக்கம்


கரூர் மாவட்டத்தில் 1,685 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு வேட்பு மனுதாக்கல் தொடக்கம்
x
தினத்தந்தி 9 Dec 2019 11:00 PM GMT (Updated: 9 Dec 2019 8:09 PM GMT)

கரூர் மாவட்டத்தில் 1,685 ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு வேட்புமனுதாக்கல் செய்யும் பணி தொடங்கியது.

கரூர்,

தமிழகத்தில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 27 மற்றும் 30-ந்தேதிகளில் 2 கட்டங்களாக நடத்தப்பட உள்ளன. அதன்படி கரூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் கரூர், தாந்தோணி, அரவக்குறிச்சி, க.பரமத்தி ஆகிய 4 ஒன்றியங்களுக்கு வருகிற 27-ந்தேதியும், குளித்தலை, கிரு‌‌ஷ்ணராயபுரம், தோகைமலை, கடவூர் ஆகிய 4 ஒன்றியங்களுக்கு வருகிற 30-ந்தேதியும் என 2 கட்டமாக ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் கரூரில் 14-ம், தாந்தோணியில் 17-ம், அரவக்குறிச்சியில் 20-ம், க.பரமத்தியில் 30-ம், குளித்தலையில் 13-ம், கிரு‌‌ஷ்ணராயபுரத்தில் 23-ம், தோகைமலையில் 20-ம், கடவூரில் 20-ம் என மொத்தம் 157 ஊராட்சிகள் மாவட்டத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.

இதில் கரூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்பு பதவிகளாக மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் 12-ம், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் 115-ம், கிராம ஊராட்சி தலைவர் 157-ம், கிராம ஊரட்சி வார்டு உறுப்பினர் 1,401-ம் என மொத்தம் 1,685 பொறுப்பு களுக்கு தேர்தல் நடைபெற உள்ளன. வேட்புமனுதாக்கல் வருகிற 6-ந்தேதி தொடங்கி 13-ந்தேதி வரை நடக்கிறது. 8 ஊராட்சி ஒன்றியங்களில் மொத்தம் 5,33,295 பேர் வாக்காளர்களாக இருக்கின்றனர். இதில் 2,60,079 ஆண்களும், 2,73,166 பெண்களும், இதர வாக்காளர்கள் 50 பேரும் அடங்குவர்.

வேட்பு மனுதாக்கல் தொடக்கம்

கரூர் மாவட்டத்தில் மொத்தம் 12 மாவட்ட ஊராட்சி வார்டுகள் உள்ளன. இதில் தலா 6 வீதம் 2 கட்டங்களிலும் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு தேர்தல் நடைபெற உள்ளது. மேலும் ஊரக உள்ளாட்சி பதவிகளுக்கு போட்டியிட விரும்புகிறவர்கள் டிசம்பர் 9-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை அந்தந்த ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அதிகாரியிடமும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மட்டும் அந்தந்த ஊராட்சி அலுவலக செயலரிடம் வேட்பு மனுவை காலை 10 மணியிலிருந்து மாலை 5 மணி வரை தாக்கல் செய்யலாம் என மாநில தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன் பேரில் கரூர் மாவட்டத்தில் கரூர், தாந்தோணி உள்பட 8 ஊராட்சி ஒன்றியங்களிலும் நேற்று காலை 10 மணிக்கு வேட்பு மனுக்களை பெறும் வகையில் தேர்தல் அதிகாரிகள் மேஜை போட்டு அமர்ந்திருந்தனர். இதில் வெண்ணைமலை பாலசுப்ரமணியசாமி கோவில் அருகேயுள்ள கரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அதிகாரியும், ஒன்றிய தேர்தல் அதிகாரியமான பாலசந்திரன் கண்காணிப்பில் வேட்பு மனுக்கள் பெறும் பணி மேற்கொள்ளப்பட்டது.

இடஒதுக்கீடு விவரங்கள் ஒட்டப்பட்டிருந்தன

புஞ்சை கடம்பங்குறிச்சி, நன்னியூர், மண்மங்கலம், வாங்கல் குப்புச்சிபாளையம், காதப்பாறை, மின்னாம்பள்ளி பஞ்சமாதேவி, நெரூர் வடக்கு, நெரூர் தெற்கு, சோமூர் உள்ளிட்ட பகுதிகளை அடங்கிய மாவட்ட ஊராட்சி வார்டுக்கு வேட்பு மனுதாக்கல் செய்ய இங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டரும், உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியுமான பாலசுப்ரமணியம், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினருக்கான வேட்புமனுவை வாங்க நியமிக்கப்பட்டிருந்தார். அந்த வார்டு பொது பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது ஆகும். இதைத்தவிர ஒன்றியக்குழு வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர் பொறுப்புகளுக்கும் வேட்பு மனுபெறும் பணி நடந்தது. இடஒதுக்கீடு, வார்டு விவரங்கள், வேட்பு மனு பெறும் அதிகாரியின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் அங்கு அறிவிப்பு பலகையில் ஒட்டப்பட்டிருந்தன.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

மனுதாக்கலுக்கு வேட்பாளருடன் முன்மொழிபவர் ஒருவர், வேட்பாளர் விரும்பும் 3 பேர் உள்பட 5 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் வெளிநபர்கள் யாரும் உள்ளே வந்து விடாதபடி கரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அவர்கள் பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பின்னரே வேட்பு மனு தாக்கல் செய்யக்கூடிய நபர்களை உள்ளே அனுப்பினர். இதே போல், 157 ஊராட்சிகளிலும் கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கான வேட்பு மனுபெறும் பணி நடந்தது. முதல் நாள் என்பதால் பிரதான அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் மனுதாக்கல் செய்ய ஆர்வம் காட்டவில்லை. தாந்தோணி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் பழைய வாக்கு பெட்டிகளை வெளியே எடுத்து அதனை சீர் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர். அப்போது துருப்பிடித்து போய் இருந்த அந்த பெட்டியை மண்எண்ணை போட்டு துடைத்து பெயிண்ட் அடிக்க ஏற்பாடு செய்யப்பட்டன.


Next Story