கொடைக்கானல் அருகே, கள்ளக்காதல் விவகாரத்தில் தொழிலாளி அடித்து கொலை


கொடைக்கானல் அருகே, கள்ளக்காதல் விவகாரத்தில் தொழிலாளி அடித்து கொலை
x
தினத்தந்தி 9 Dec 2019 10:45 PM GMT (Updated: 9 Dec 2019 8:54 PM GMT)

கொடைக்கானல் அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் தொழிலாளியை அடித்து கொலை செய்த கள்ளக்காதலி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

கொடைக்கானல்,

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள வெள்ளைப்பாறை பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 40). இவர் தனக்கு சொந்தமான காரை கடந்த 6-ந்தேதி இரவு அப்பகுதியில் உள்ள தனியார் காட்டேஜில் நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்றார். பின்னர் மறுநாள் வந்து பார்த்தபோது, அந்த கார் தீயில் எரிந்து முற்றிலும் நாசமாகி கிடந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர், கொடைக்கானல் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சந்தேகத்தின் அடிப்படையில் முருகனின் தம்பி மணிகண்டன், அவரது நண்பர் நாகராஜ் ஆகியோரை தேடி வந்தனர்.

இதையடுத்து கார் எரிக்கப்பட்ட வழக்கில் பின்புலம் இருக்கக்கூடும் என்ற சந்தேகத்தின் பேரில் கொடைக்கானல் போலீஸ் துணை சூப்பிரண்டு ஆத்மநாதன் உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் ராஜசேகர், ஏட்டுகள் சரவணன், ராமராஜன், காசிநாதன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு, மணிகண்டனை தேடி வந்தனர்.

இந்தநிலையில் தலைமறைவாக இருந்த மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதுகுறித்து போலீசார் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கொடைக்கானலை சேர்ந்த மணிகண்டனுக்கு ஏற்கனவே திருமணமாகி மனைவி, குழந்தைகள் உள்ளனர். இதற்கிடையே அவருக்கும், பேத்துப்பாறை பகுதியை சேர்ந்த சாந்தி (36) என்பவருக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. மேலும் சாந்தியின் அக்காள் ஜான்சிராணிக்கும்(40), தேனி மாவட்டம் ஓடைப்பட்டியை சேர்ந்த திருப்பதி(48) என்பவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது. திருப்பதி, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பத்தை விட்டு பிரிந்து கொடைக்கானல் அருகே பேத்துப்பாறை பகுதிக்கு வந்தார். அங்கு அவர் கூலித்தொழிலாளியாக வேலை செய்து வந்தார். சாந்திக்கும், மணிகண்டனுக்கும் உள்ள கள்ளத்தொடர்பு திருப்பதிக்கு பிடிக்கவில்லை. இதுதொடர்பாக கேட்டு சாந்தியை அவர் கண்டித்துள்ளார். இதனை சாந்தி மணிகண்டனிடம் தெரிவிக்கவே, அவருக்கும், திருப்பதிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துவந்தது.

இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன், திருப்பதியை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி கடந்த ஆகஸ்டு மாதம் 14-ந்தேதி இரவு திருப்பதியை ஜான்சிராணி, சாந்தி உள்ளிட்டோர் வீட்டிற்கு அழைத்துள்ளனர். அதன்படி வந்த திருப்பதியை, அங்கு ஏற்கனவே பதுங்கியிருந்த மணிகண்டன், அவரது நண்பர்களான பெருமாள்மலை ஜெ.ஜெ.நகரை சேர்ந்த நாகராஜ் (23), பேத்துப்பாறையை சேர்ந்த சரத்குமார் (30) மற்றும் வி‌‌ஷ்ணு (30) மற்றும் ஜான்சிராணி, சாந்தி ஆகியோர் சேர்ந்து அடித்து கொலை செய்தனர். பின்னர் அவரது உடலை, அடுக்கம் அருகே உள்ள குருசடி பள்ளத்தில் வீசியுள்ளனர்.

கார் எரிக்கப்பட்ட வழக்கில் மணிகண்டன் பிடிபட்ட நிலையில், தன்னை இந்த கொலை வழக்கில் தான் போலீசார் பிடித்ததாக நினைத்து அனைத்து விவரங்களையும் போலீசாரிடம் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து கொலையில் தொடர்புடைய மணிகண்டன், சரத்குமார், நாகராஜ், ஜான்சிராணி, சாந்தி ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். இதில் தலைமறைவாக உள்ள வி‌‌ஷ்ணுவை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் கொலை செய்யப்பட்ட திருப்பதியின் உடலை தேடும் பணியும் நடக்கிறது. 

Next Story