மாவட்டத்தில் முதல்நாளில் 187 பேர் வேட்புமனு தாக்கல் கலெக்டர் மெகராஜ் ஆய்வு


மாவட்டத்தில் முதல்நாளில் 187 பேர் வேட்புமனு தாக்கல் கலெக்டர் மெகராஜ் ஆய்வு
x
தினத்தந்தி 9 Dec 2019 10:30 PM GMT (Updated: 9 Dec 2019 9:59 PM GMT)

நாமக்கல் மாவட்டத்தில் முதல்நாளான நேற்று 187 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்யப்படுவதை கலெக்டர் மெகராஜ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நாமக்கல்,

தமிழகத்தில் உள்ள 27 மாவட்டங்களில் வருகிற 27 மற்றும் 30-ந் தேதிகளில் 2 கட்டமாக கிராம ஊராட்சி பதவிகளுக்கு உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் முதல் கட்டமாக வருகிற 27-ந் தேதி கபிலர்மலை, கொல்லிமலை, மல்லசமுத்திரம், நாமகிரிப்பேட்டை, பள்ளிபாளையம், ராசிபுரம், திருச்செங்கோடு மற்றும் வெண்ணந்தூர் என 8 ஊராட்சி ஒன்றியங்களில் 1,579 பதவிகளுக்கும், 2-ம் கட்டமாக எலச்சிபாளையம், எருமப்பட்டி, மோகனூர், நாமக்கல், பரமத்தி, புதுச்சத்திரம் மற்றும் சேந்தமங்கலம் ஒன்றியங்களில் 1,527 பதவிகளுக்கும் தேர்தல் நடக்கிறது.

இதன் மூலம் 17 மாவட்ட ஊராட்சிகுழு உறுப்பினர்கள், 172 ஊராட்சி ஒன்றியகுழு உறுப்பினர்கள், 322 ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் 2,595 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

187 பேர் வேட்புமனு தாக்கல்

இதற்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. மாவட்ட ஊராட்சிகுழு உறுப்பினர், ஒன்றியகுழு உறுப்பினர் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் பதவிக்கு சம்பந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு தொடர்புடைய ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் வேட்புமனுக்களை பெறுவதற்காக அதிகாரிகள் தயார் நிலையில் இருந்தனர்.

நாமக்கல் மாவட்டத்தில் நேற்று 15 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் 322 ஊராட்சி அலுவலகங்களில் வேட்புமனுக்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பெறப்பட்டன.

மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கு ஒருவரும், ஒன்றியகுழு உறுப்பினர் பதவிக்கு 23 பேரும், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 12 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 151 பேரும் என மொத்தம் 187 பேர் முதல் நாளான நேற்று வேட்புமனு தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசிநாள் வருகிற 16-ந் தேதி என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

கலெக்டர் ஆய்வு

முன்னதாக நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வேட்புமனுக்கள் பெறும் பணியை கலெக்டர் மெகராஜ் ஆய்வு செய்தார். அப்போது அவர் வேட்புமனு தாக்கல் தொடர்பான படிவங்கள் மற்றும் ஆவணங்களை பார்வையிட்டார். மேலும் தேர்தல் அறிவிப்பு தொடர்பான அறிவிக்கைகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் வேட்புமனுக்களை பெறும் அலுவலர்களுக்கு ஆலோசனை வழங்கினார். இந்த ஆய்வின்போது வட்டார வளர்ச்சி அலுவலர் தேன்மொழி மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Next Story