பழனி முருகன் கோவிலில் 2-வது ரோப்கார் அமைக்கும் பணி - பிரான்ஸ் வல்லுனர் ஆய்வு


பழனி முருகன் கோவிலில் 2-வது ரோப்கார் அமைக்கும் பணி - பிரான்ஸ் வல்லுனர் ஆய்வு
x
தினத்தந்தி 9 Dec 2019 10:15 PM GMT (Updated: 9 Dec 2019 10:32 PM GMT)

பழனி முருகன் கோவிலில் 2-வது ரோப்கார் அமைக்கும் பணியை பிரான்ஸ் நாட்டின் ரோப்கார் வல்லுனர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பழனி, 

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடாக பழனி முருகன் கோவில் திகழ்கிறது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் அடிவாரத்தில் இருந்து படிப்பாதை, யானைபாதை, மின்இழுவை ரெயில், ரோப் கார் வழியாக மலைக்கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்வார்கள்.

குறிப்பாக திருவிழா, விசே‌‌ஷ நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். அப்போது கோவிலுக்கு செல்வதற்கு ரோப்கார், மின்இழுவை ரெயில் நிலையத்தில் பக்தர்கள் பல மணி நேரம் காத்திருக்க வேண்டியது உள்ளது. மேலும் தற்போது உள்ள 1-வது ரோப்கார் மூலம் ஒரு மணி நேரத்துக்கு சுமார் 400 பேர் மட்டுமே செல்ல முடியும். எனவே 2-வது ரோப்கார் அமைக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து 2-வது ரோப்கார் சேவை திட்டத்தை செயல்படுத்த கோவில் நிர்வாகம் முடிவு செய்தது. அதன்படி ரூ.73 கோடியில் 2-வது ரோப்கார் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. இதற்காக அடிவாரம் மற்றும் மலையில் 2-வது ரோப்கார் அமைய உள்ள இடத்தில் பாறையின் உறுதி தன்மையை ஆய்வு செய்வதற்காக மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. தற்போது பாறையின் மாதிரிகள் சென்னையில் உள்ள ஆய்வகத்தில் சோதனை செய்யப்பட்டபின் அடிவாரத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தநிலையில் பிரான்ஸ் நாட்டில் இருந்து ரோப்கார் வல்லுனரும், 2-வது ரோப்கார் திட்ட மேலாளருமான ஷெல்லி, நேற்று பழனி முருகன் கோவிலுக்கு வந்தார். தொடர்ந்து அவர் அடிவாரத்தில் நடைபெற்று வரும் 2-வது ரோப்கார் கட்டுமான பணிகளை, அதற்கான வரைபடத்தை வைத்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் மலையில் தொடங்க உள்ள கட்டுமான பணிகளுக்கு தேவையான பொருட்களை எவ்வாறு கொண்டு செல்வது என்பது குறித்து கோவில் பொறியாளர்களிடம் கேட்டறிந்தார். மேலும் கட்டுமான பணிகள் தொடர்பாக பொறியாளர்களுக்கு ஆலோசனை வழங்கினார். ஆய்வின்போது கோவில் பொறியாளர்கள் நாச்சிமுத்து, குமார், பார்த்திபன் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story