திருமானூர் அருகே தூக்குப்போட்டு மாணவன் தற்கொலை


திருமானூர் அருகே தூக்குப்போட்டு மாணவன் தற்கொலை
x
தினத்தந்தி 10 Dec 2019 11:00 PM GMT (Updated: 10 Dec 2019 4:21 PM GMT)

திருமானூர் அருகே தூக்குப்போட்டு மாணவன் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கீழப்பழுவூர்,

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கீழக்கவட்டாங்குறிச்சி புதுக்காலனி தெருவை சேர்ந்தவர் ரவி மகன் ரகு(வயது 14). இவர் கீழக்கவட்டாங்குறிச்சி கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் பள்ளிக்கு கிளம்பிய ரகு பள்ளி வரை சென்று தனது புத்தகப்பையை வகுப்பறையில் வைத்து விட்டு, மீண்டும் வீட்டுக்கு திரும்பி வந்துள்ளான். பின்னர் வகுப்பு ஆரம்பித்தபோது, வகுப்பு ஆசிரியர் வருகை பதிவேடை சரிபார்த்தபோது மாணவனின் புத்தகப்பை மட்டும் இருந்துள்ளது. மாணவன் ரகுவை காணவில்லை. இதனையடுத்து ஆசிரியர் அவனுடன் பயிலும் சக மாணவர்களை ரகுவின் வீட்டிற்கு அனுப்பி ரகு இருக்கிறானா? என பார்த்து வரச்சொல்லி அனுப்பி வைத்தார். அங்கு சென்று மாணவர்கள் பார்த்தபோது, வீட்டின் கதவுகள் உள்பக்கமாக தாழ்ப்பாள் போடப்பட்டு இருந்தது. பின்னர் அவர்கள் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தபோது, மாணவன் ரகு சேலையில் தூக்கு மாட்டி தொங்கிய நிலையில் பிணமாக தொங்கினான்.

போலீசார் விசாரணை

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக மாணவர்கள் சத்தம்போடவே அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து மாணவனின் பெற்றோருக்கும், திருமானூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த, ரகுவின் பெற்றோர் அவனது உடலை பார்த்து கதறி அழுதனர். பின்னர் திருமானூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புச்செல்வன் தலைமையிலான போலீசார் வந்து, மாணவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் மாணவன் என்ன காரணத்திற்காக தற்கொலை செய்து கொண்டான்? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Next Story