2 மாவட்ட பிரிவினையில் குளறுபடி: வீட்டின் முன்பகுதி விழுப்புரம் மாவட்டம், சமையலறை கள்ளக்குறிச்சி மாவட்டம்
2 மாவட்ட பிரிவினையில் குளறுபடி ஏற்பட்டுள்ளது. வீட்டின் முன்பகுதி விழுப்புரம் மாவட்டத்திலும், சமையலறை கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் இருப்பதால் என்ன செய்வதென்று தெரியாமல் கருவேப்பிலைப்பாளையம் கிராம மக்கள் தவிக்கிறார்கள்.
விழுப்புரம்,
உளுந்தூர்பேட்டை தாலுகாவிற்குட்பட்டது கருவேப்பிலைப்பாளையம் கிராமம். இந்த கிராமத்தில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமம் திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்தில் காந்தலவாடி, திருநாவலூர் ஒன்றியத்தில் சிறுத்தனூர், மடப்பட்டு, சிறுளாப்பட்டு ஆகிய 4 ஊராட்சிகளை சார்ந்துள்ள குக்கிராமமாக உள்ளது. தற்போது தமிழக அரசு, விழுப்புரம் மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக இரண்டாக பிரித்து கள்ளக்குறிச்சியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டத்தை தோற்றுவித்து அந்த மாவட்டம் கடந்த மாதம் 26-ந் தேதி முதல் தனி மாவட்டமாக செயல்பட தொடங்கியுள்ளது.
இந்த மாவட்ட பிரிவினையின்போது கருவேப்பிலைப்பாளையத்தின் ஒரு பகுதி விழுப்புரம் மாவட்டத்திலும், மற்றொரு பகுதி கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் இருந்து விழுப்புரம் 16 கி.மீ. தூரமும், கள்ளக்குறிச்சி 100 கி.மீ. தூரமும் உள்ளது. இக்கிராமத்தின் ஒவ்வொரு தெருவும் ஒரு ஊராட்சியாக உள்ளது. குறிப்பாக ஒரு குடும்பத்தில் அண்ணன் வீடு விழுப்புரம் மாவட்டத்திலும், தம்பி வீடு கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் உள்ளன. அதுபோல் சில தெருக்கள் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும், சில தெருக்கள் விழுப்புரம் மாவட்டத்திலும் உள்ளன.
மேலும் ஒரு தெருவில் உள்ள 50-க்கும் மேற்பட்ட வீடுகளில் வீட்டின் முன்பகுதி விழுப்புரம் மாவட்டமாகவும், சமையலறை பகுதி கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் உள்ளன. அப்பாவின் ரேஷன் கார்டு விழுப்புரம் மாவட்டத்திலும், மகனின் ரேஷன் கார்டு கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும் உள்ளன. இதுபோல் இந்த கிராமத்தில் எண்ணற்ற சான்றிதழ்களிலும், ஆவணங்களிலும் மாறி, மாறி உள்ளன. இக்கிராமத்தில் இருப்பவர்கள் பெரும்பாலானோர் படிப்பறிவு குறைவாகவும், விவசாயிகளாகவும், கூலி வேலை செய்பவர்களும்தான் உள்ளனர். இந்த குளறுபடியினால் கிராம மக்கள் பெரிதும் குழப்பத்திற்கு ஆளாகி தவித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story