திருவள்ளூர் சோதனைச்சாவடி அருகே தடுப்புச்சுவரில் லாரி மோதி விபத்து; வெங்காய மூட்டைகள் சிதறின


திருவள்ளூர் சோதனைச்சாவடி அருகே தடுப்புச்சுவரில் லாரி மோதி விபத்து; வெங்காய மூட்டைகள் சிதறின
x
தினத்தந்தி 10 Dec 2019 11:15 PM GMT (Updated: 10 Dec 2019 6:49 PM GMT)

திருவள்ளூர் சோதனைச்சாவடி அருகே லாரி தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் வெங்காய மூட்டைகள் சிதறின.

திருவள்ளூர்,

ஆந்திர மாநிலத்தில் இருந்து ஒரு சரக்கு லாரியில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள 10 டன் வெங்காயத்தை ஏற்றிக்கொண்டு சரக்கு லாரி ஒன்று சென்னை கோயம்பேடு நோக்கி நேற்று முன்தினம் இரவு வந்துகொண்டிருந்தது. அந்த சரக்கு லாரியை ஆந்திர மாநிலம் தாடப்பத்திரி கிராமத்தை சேர்ந்த டிரைவரான ஜில்லான் (வயது 28) ஓட்டி வந்தார். உடன் அதன் உரிமையாளரான ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மாபாஷா ( 48) வந்தார்.

அந்த லாரி திருவள்ளூர் சோதனைச்சாவடி அருகே நேற்று அதிகாலை 4½ மணி அளவில் வந்து கொண்டிருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவில் இருந்த தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் அந்த லாரியில் இருந்த வெங்காய மூட்டைகள் சாலையிலும், சாலையோரம் உள்ள புதரிலும் சிதறியது. மேலும் அந்த சரக்கு லாரியில் முன்பகுதி நொறுங்கி 2 டயர்கள் தனியாக இணைப்புடன் பிரிந்து சென்றது.

இந்த விபத்தில் லாரி டிரைவர் மற்றும் உரிமையாளர் காயமின்றி உயிர் தப்பினர். இது குறித்து தகவல் அறிந்ததும் திருவள்ளூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை சீரமைத்தனர். வெங்காய மூட்டைகள் போலீசார் உதவியுடன் வேறு ஒரு லாரி மூலம் ஏற்றி மீண்டும் சென்னை கோயம்பேட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

வெங்காயம் ஏற்றி வந்த லாரி விபத்துக்குள்ளானதில் அந்த பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story