சரியாக படிக்காததை தாயார் கண்டித்ததால் 7-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை


சரியாக படிக்காததை தாயார் கண்டித்ததால் 7-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 10 Dec 2019 11:00 PM GMT (Updated: 10 Dec 2019 8:00 PM GMT)

சிவகிரி அருகே சரியாக படிக்காததை தாயார் கண்டித்ததால் 7-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

சிவகிரி,

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே உள்ள உள்ளார் தளவாய்புரம் வேதகோவில் தெருவை சேர்ந்தவர் முனியாண்டி. இவருடைய மகன் குமரேசன் (வயது 13). இவன் சிவகிரி அருகே உள்ள தேவிபட்டினம் விலக்கு பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் குமரேசன் சரியாக படிக்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை அவனுடைய தாயார் இசக்கியம்மாள் கண்டித்துள்ளார். இதனால் குமரேசன் மனமுடைந்து காணப்பட்டார்.

இந்த நிலையில் நேற்று இசக்கியம்மாள் வேலைக்கு சென்றபிறகு குமரேசன் வீட்டிற்குள் சென்று கதவை உள்பக்கமாக பூட்டிக்கொண்டார். வெகுநேரமாகியும் கதவு திறக்கப்படவில்லை.

தூக்குப்போட்டு தற்கொலை

இதில் சந்தேகம் அடைந்த அக்கம்பக்கத்தினர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு குமரேசன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து உடனடியாக சிவகிரி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் மாரியப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். குமரேசன் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சிவகிரி அருகே சரியாக படிக்காததை தாயார் கண்டித்ததால் 7-ம் வகுப்பு மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

Next Story