மர்ம காய்ச்சலுக்கு 7 வயது சிறுமி பலி


மர்ம காய்ச்சலுக்கு 7 வயது சிறுமி பலி
x
தினத்தந்தி 10 Dec 2019 10:30 PM GMT (Updated: 10 Dec 2019 8:03 PM GMT)

பாவூர்சத்திரம் அருகே மர்ம காய்ச்சலுக்கு 7 வயது சிறுமி பலியான சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.

பாவூர்சத்திரம்,

தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே உள்ள நவநீதகிரு‌‌ஷ்ணபுரத்தை சேர்ந்தவர் நாராயணன். விவசாயி. இவருடைய மகள் தானியஸ்ரீ (வயது 7). இவள் அங்குள்ள ஒரு தனியார் பள்ளிக்கூடத்தில் 2-ம் வகுப்பு படித்து வந்தாள். தானியஸ்ரீக்கு கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று தானியஸ்ரீ பள்ளிக்கூடத்திற்கு சென்றாள். அப்போது, அவளுக்கு திடீரென்று வாந்தி ஏற்பட்டது. அந்த சமயத்தில் அங்கு சுகாதார பணிகள் மேற்கொள்ள வந்த ஊழியர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சிறுமியை தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே தானியஸ்ரீ பரிதாபமாக இறந்தாள்.

மேலும் 2 பேர் பாதிப்பு

மேலும் தானியஸ்ரீயின் சகோதரர்களான ய‌‌ஷ்வந்த் (6), பாலவைகுண்டம் (2) ஆகியோரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து சுகாதார பணியாளர்கள் அந்த பகுதியில் காய்ச்சல் தடுப்பு பணிகளை மேற்கொண்டனர். அந்த பகுதியில் பொதுமக்கள் யாருக்கும் காய்ச்சல் ஏற்பட்டால் பயிற்சி இல்லாத டாக்டர்களிடம் சிகிச்சை பெற வேண்டாம். உடனடியாக அரசு டாக்டர்களை அணுக வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

Next Story