வெம்பக்கோட்டை அருகே, அனுமதியின்றி பட்டாசு கருந்திரி தயாரித்த பெண் கருகி சாவு
அனுமதியின்றி கருந்திரி தயாரித்தபோது ஏற்பட்ட தீவிபத்தில் பெண் உயிரிழந்தார். கொசு பேட்டில் இருந்து தீப்பொறி பறந்ததால் இந்த சம்பவம் நடந்தது தெரியவந்தது.
தாயில்பட்டி,
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே இ.மீனாட்சிபுரத்தை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 45). இவர் வீட்டில் வைத்து அனுமதியின்றி பட்டாசு கருந்திரி தயாரித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த பணியில் இ.மீனாட்சிபுரத்தை சேர்ந்த அழகுபொன்னு என்பவரது மனைவி அம்பிகா (42) உள்பட 4 பேர் ஈடுபட்டு இருந்தனர்.
அப்போது கொசு கடித்ததால், கொசுவை அடிக்கும் பேட் வைத்து அம்பிகா கொசுவை அடித்துள்ளார். அதில் ஏற்பட்ட தீப்பொறி கருந்திரி மீது விழுந்துள்ளது. இதில் ஏற்பட்ட தீ விபத்தில் அம்பிகா படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இது குறித்து வெம்பக்கோட்டை போலீசார், கிருஷ்ணமூர்த்தி மீது வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அம்பிகாவின் கணவர் அழகுபொன்னு அட்டை மில் தொழிலாளியாவார். இந்த தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.
Related Tags :
Next Story