காவலன் செயலியை பயன்படுத்தினால் பெண்களின் பாதுகாப்பு உறுதி டி.ஐ.ஜி. லோகநாதன் பேச்சு


காவலன் செயலியை பயன்படுத்தினால் பெண்களின் பாதுகாப்பு உறுதி டி.ஐ.ஜி. லோகநாதன் பேச்சு
x
தினத்தந்தி 11 Dec 2019 11:00 PM GMT (Updated: 11 Dec 2019 4:56 PM GMT)

காவலன் செயலியை பயன்படுத்தினால் பெண்களின் பாதுகாப்பு உறுதி என்று டி.ஐ.ஜி. லோகநாதன் கூறினார்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட காவல்துறை சார்பில் தஞ்சையில் உள்ள குந்தவை நாச்சியார் மகளிர் கல்லூரியில் காவலன் செயலி தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு போலீஸ் டி.ஐ.ஜி. லோகநாதன் தலைமை தாங்கினார்.

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், கல்லூரி முதல்வர் திருவள்ளுவன், துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

துண்டு பிரசுரங்கள்

காவலன் செயலி தொடர்பான துண்டு பிரசுரங்களை மாணவிகளிடம், டி.ஐ.ஜி. லோகநாதன் வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

காவலன் செயலியை பயன்படுத்தினால் பெண்களின் பாதுகாப்பு 100 சதவீதம் உறுதி. இந்த செயலியை ஆன்ட்ராய்டு செல்போன் வைத்திருப்பவர்கள் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். பெண்கள், வீட்டில் தனியாக இருக்கும் முதியவர்கள், சிறுவர்களுக்கு இது பாதுகாப்பானதாக இருக்கும்.

பாதுகாப்பு உறுதி

இந்த செயலியில் உங்களின் உறவினர்கள் 2 பேரின் எண்களை கட்டாயம் பதிவு செய்து வைத்துக்கொள்ள வேண்டும். ஏதாவது ஆபத்து நேர்ந்தால் இந்த செயலி மூலம் நீங்கள் தொடர்பு கொண்டால் அது சென்னையில் உள்ள போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கப்பட்டு அந்தந்த மாவட்ட போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்கப்படும்.

அங்கிருந்து உங்கள் செல்போன் இருக்கும் இடம் குறித்த தகவல் சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உரிய நடவடிக்கை எடுப்பார்கள். நீங்கள் பதிவு செய்து வைத்துள்ள 2 எண்களுக்கும் உடனடியாக தகவல் தெரிவிக்கப்படும்.

கடின உழைப்பு

தற்போது வாட்ஸ்-அப், முகநூல் போன்றவை மூலம் பல்வேறு ஆபத்துகளும் ஏற்படுகின்றன. எனவே இதனை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பது மிகவும் முக்கியம். எனவே அதை தேவை என்றால் மட்டும் பயன்படுத்துங்கள். தவறான வழியில் பயன்படுத்தினால் அது உங்களையே பாதிக்கும். விளையாட்டாக செய்தால் அது வினையாக முடியும்.

எனவே ஜாக்கிரதையாக அணுகுங்கள். உங்கள் வெற்றி உங்கள் கையில் தான் உள்ளது. கடின உழைப்பு, விடா முயற்சி இருந்தால் நினைத்த காரியம் வெற்றியடையும். இந்த செயலி குறித்து மற்றவர்களுக்கும் எடுத்துக்கூறுங்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.

இதில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர், கல்லூரி பேராசிரியர்கள், மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக கல்லூரி நிதியாளர் ராஜாராமன் வரவேற்றார். முடிவில் அலுவலக கண் காணிப்பாளர் பாலசுப்பிர மணியன் நன்றி கூறினார்.


Next Story