பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 3-வது நாளில் 169 பேர் வேட்பு மனு தாக்கல்


பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 3-வது நாளில் 169 பேர் வேட்பு மனு தாக்கல்
x
தினத்தந்தி 11 Dec 2019 11:00 PM GMT (Updated: 11 Dec 2019 6:44 PM GMT)

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 3-வது நாளான நேற்று 169 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், வேப்பந்தட்டை, ஆலத்தூர், வேப்பூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் 121 கிராம ஊராட்சி தலைவர்கள், 121 கிராம ஊராட்சிகளில் உள்ள 1,032 வார்டு உறுப்பினர்கள், 8 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 76 ஊராட்சி ஒன்றிய குழு வார்டு உறுப்பினர்கள் என ஊரக பகுதிகளில் காலியாக உள்ள மொத்தம் 1,237 பதவியிடங்களுக்கு நேர்முக தேர்தல் 2 கட்டமாக நடைபெறவுள்ளது.

முதல் கட்டமாக பெரம்பலூர், வேப்பூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு வருகிற 27-ந் தேதியும், 2-ம் கட்டமாக வேப்பந்தட்டை, ஆலத்தூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்கு வருகிற 30-ந் தேதியும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

வேட்பு மனுதாக்கல்

இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 9-ந் தேதி முதல் தொடங்கியது. பெரம்பலூர் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடத்துக்கு வேட்பு மனு தாக்கல் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை அந்தந்த கிராம ஊராட்சி மன்ற அலுவலகத்திலும், இதே போல் கிராம ஊராட்சி தலைவர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய குழு வார்டு உறுப்பினர் ஆகிய பதிவியிடங்களுக்கு வேட்பு மனு தாக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும் நடைபெற்று வருகிறது.

259 பேர்

3-வது நாளான நேற்று மட்டும் பெரம்பலுர் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு ஒருவரும், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 44 பேரும், கிராம ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 124 பேர் என மொத்தம் 169 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில், இதுவரைக்கும் கிராம ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 209 பேரும், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 49 பேரும், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் பதவிக்கு ஒருவரும் என மொத்தம் 259 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். பெரம்பலூர் மாவட்டத்தில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு இதுவரை யாரும் வேட்பு மனுதாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story