ரூ.15 ஆயிரம் கடனுக்கு அடமானமாக 13 வயது மகளை திருமணம் செய்து கொடுத்த தம்பதி 5 பேர் கைது


ரூ.15 ஆயிரம் கடனுக்கு அடமானமாக 13 வயது மகளை திருமணம் செய்து கொடுத்த தம்பதி 5 பேர் கைது
x
தினத்தந்தி 11 Dec 2019 10:30 PM GMT (Updated: 11 Dec 2019 6:54 PM GMT)

ரூ.15 ஆயிரம் கடனுக்கு அடமானமாக தங்களது 13 வயது மகளை வாலிபருக்கு திருமணம் செய்து கொடுத்த தம்பதி உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

குளித்தலை,

திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை அருகே உள்ள கவுண்டனூரை சேர்ந்தவர் மூக்கன் (வயது 45). இவரது மனைவி அஞ்சலம் (40). இவர்களது மகன் சரவணகுமார் (23). இவர்களிடம் கரூர் மாவட்டம் குளித்தலையில் உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த தம்பதி ரூ.15 ஆயிரம் கடன் வாங்கி இருந்தனர்.

இந்த நிலையில் அந்த தம்பதியால் பணத்தை திருப்பி செலுத்த முடியவில்லை. இதனால் அவர்கள், அடமானமாக தங்களின் 13 வயது மகளை சரவணகுமாருக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

அதன்படி, இரு வீட்டாரும் பேசி, கடந்த ஜூன் மாதம் 27-ந்தேதி குஜிலியம்பாறையில் உள்ள கரிக்காலி பெருமாள் கோவிலில் வைத்து சரவணகுமாருக்கு 13 வயது சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்தனர்.

வாலிபர் உள்பட 5 பேர் கைது

கடந்த 5 மாதமாக சரவணகுமார் அந்த சிறுமியுடன் குடும்பம் நடத்தி வந்தார். இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாத அந்த சிறுமி, தனக்கு திருமணம் நடந்தது குறித்து குழந்தைகள் நல உதவி மையத்துக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில், கரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாண்டியராஜன் உத்தரவின் பேரில் குளித்தலை அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) அன்னம் தலைமையிலான போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இதைத்தொடர்ந்து போக்சோ சட்டத்தின் கீழ் சரவணகுமாரையும், குழந்தை திருமண தடுப்பு சட்டப்பிரிவின் கீழ் சரவணகுமாரின் பெற்றோர் மற்றும் சிறுமியின் பெற்றோர் ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர் 5 பேரும் கரூர் மகிளா கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு திருச்சி சிறையில் அடைக்கப்பட்டனர். சிறுமி மருத்துவ பரிசோதனைக்கு பிறகு காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.


Next Story