குழித்துறையில் ஒரு தனியார் மகளிர் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான மாணவிகள் படித்து வருகிறார்கள். நேற்று மாலை வழக்கம் போல் கல்லூரி முடிந்ததும் மாணவிகள் பஸ் நிறுத்தம் நோக்கி நடந்து வந்து கொண்டிருந்தனர். அப்போது, மேல்புறத்தில் இருந்து குழித்துறை நோக்கி ஒரு மினி பஸ் வந்தது.
குழித்துறை தீயணைப்பு நிலையம் அருகில் வந்தபோது, திடீரென மினி பஸ் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக ஓடி அப்பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்த கல்லூரி மாணவிகள் கூட்டத்துக்குள் புகுந்தது.
தூக்கி வீசப்பட்டனர்
உடனே மாணவிகள் அலறியபடி நாலாபுறமும் சிதறி ஓடினார்கள். பலர் மீது மினி பஸ் மோதியதில் மாணவிகள் தூக்கி வீசப்பட்டனர். இதைகண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து சம்பவ இடம் நோக்கி ஓடி வந்தனர்.
மினி பஸ் மோதி தூக்கி வீசப்பட்டதில் 12 பேர் படுகாயம் அடைந்தனர். இதில் கழுவன்திட்டை பகுதியை சேர்ந்த மாணவி சுஜித்ரா மற்றும் நெய்யாற்றின்கரை பகுதியை சேர்ந்த உதவி பேராசிரியை பிரேமா ஆகிய 2 பேரும் உயிருக்கு போராடி கொண்டிருந்தனர்.
தீவிர சிகிச்சை
மாணவிகளின் அலறல் சத்தம் கேட்டு குழித்துறை தீயணைப்பு நிலையத்தில் பணியில் இருந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து படுகாயம் அடைந்த மாணவி சுஜித்ரா, உதவி பேராசிரியை பிரேமா ஆகிய இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், விபத்தில் படுகாயம் அடைந்த மாணவிகள் வைஷ்ணவி, அர்ச்சனா, போஸ்விகா, ஜெயலட்சுமி, ரெஜிலா, வினிஷா, நிஷா, ஜாண் பெனிட்டா, மேரி, அஜிதா ஆகியோரை மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பரபரப்பு
இதற்கிடையே விபத்து நடந்ததும், மினி பஸ்சை நிறுத்தி விட்டு, டிரைவர் தப்பி ஓடினார். அப்போது, அங்கிருந்த பொதுமக்கள் அவரை விரட்டிச் சென்று மடக்கி பிடித்தனர். பின்னர், அவரை களியக்காவிளை போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் டிரைவர் பளுகல் பகுதியை சேர்ந்த வினில்ராஜ்(வயது 25) என்பது தெரியவந்தது. மேலும், இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மாணவிகள் கூட்டத்துக்குள் மினிபஸ் புகுந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
நெல்லையில் பெய்த பலத்த மழையால் மரக்கிளை முறிந்து விழுந்து வாலிபர் உயிரிழந்தார். நண்பர் படுகாயம் அடைந்தார். அணையில் மூழ்கிய சிறுவன் கதி என்னவென்று தெரியாததால் குடும்பத்தினர் கலக்கத்தில் உள்ளனர்.