கும்மிடிப்பூண்டியில் வியாபாரிகள் திடீர் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு


கும்மிடிப்பூண்டியில் வியாபாரிகள் திடீர் சாலை மறியல் - போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 11 Dec 2019 10:15 PM GMT (Updated: 11 Dec 2019 8:30 PM GMT)

கும்மிடிப்பூண்டியில் வியாபாரிகள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த வழித்தடத்தில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கும்மிடிப்பூண்டி, 

கும்மிடிப்பூண்டி தாசில்தார் செந்தாமரைச்செல்வி தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றி அரசு முன்னிலையில் பேரூராட்சி ஊழியர்கள் நேற்று கும்மிடிப்பூண்டியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ் டிக் ஒழிப்பு தொடர்பாக திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது பல்வேறு கடைகளில் இருந்து மொத்தம் 200 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக ஒரு பல்பொருள் அங்காடியில் ரூ.25 ஆயிரம் உள்பட மொத்தம் ரூ.35 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளுக்கான விற்பனையை பெரும்பாலும் நிறுத்தி விட்டதாகவும், ஒரு பல்பொருள் அங்காடியில் மட்டும் உணவு பொருட்களை கொடுத்து அனுப்புவதற்காக வைத்திருந்த பிளாஸ்டிக் பைகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து விட்டனர் என்று வியாபாரிகள் அதிகாரிகள் மீது குற்றம் சாட்டினர்.

மேலும் பெரிய வர்த்தக நிறுவனங்கள் உணவு பொருட் களை பிளாஸ்டிக் பைகளில் பார்சல் செய்து விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றன. சிறிய வியாபார நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் பிளாஸ் டிக் பைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தது கண்டிக்கத்தக்கது. அதற்கான மாற்று நடவடிக்கையை அதிகாரிகள் தெரிவித்திருக்க வேண்டும் என்று கூறி கும்மிடிப்பூண்டி அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் அதன் தலைவர் புல்லட் கோவிந்தராஜ் தலைமையில் கும்மிடிப்பூண்டி பஸ் நிலையம் எதிரே திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நிர்வாகிகள் கேசவன், அப்துல் கறீம், பன்னீர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த சாலை மறியல் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றி அரசு சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் ஆகியோர் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து தங்களது 1 மணி நேர சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு வியாபாரிகள் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story