திருபுவனை அருகே போலீசாரை தாக்கிய ரவுடி ஜனா கூட்டாளிகள் - 2 பேர் கைது


திருபுவனை அருகே போலீசாரை தாக்கிய ரவுடி ஜனா கூட்டாளிகள் - 2 பேர் கைது
x
தினத்தந்தி 12 Dec 2019 10:30 PM GMT (Updated: 12 Dec 2019 5:20 PM GMT)

திருபுவனை அருகே கரும்பு தோட்டத்தில் போலீசாரை தாக்கிய ரவுடி ஜனாவின் கூட்டாளிகள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருபுவனை,

திருபுவனை அருகே மதகடிப்பட்டு கலிதீர்த்தாள்குப்பத்தை சேர்ந்த பிரபல ரவுடி ஜனா என்ற ஜனார்த்தனன் (வயது 32). இவர் மீது தொழிலதிபர் வேலழகன் கொலை உள்பட மேலும் பல கொலைகள், வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன.

இதனால் அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. தொடர்ந்து தலைமறைவாக இருந்து வரும் ஜனாவுக்கு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்துள்ளதையொட்டி அவரை போலீசார் தேடி வந்தனர்.

இந்தநிலையில் ரகசிய தகவலின் பேரில் திருபுவனை அருகே ஆண்டியார் பாளையத்தில் ஒரு கரும்புத் தோட்டத்தில் கடந்த 8-ந்தேதி போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

அப்போது போலீசாரை தாக்கி விட்டு கூட்டாளிகளுடன் ஜனா தப்பி ஓடினார். தப்பி ஓடியவர்களில் சின்னபாபு சமுத்திரத்தை சேர்ந்த சாத்ராஜ் (வயது35) என்பவருக்கு கீழே விழுந்ததில் கை முறிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் ரவுடிகள் பதுங்கி இருந்த இடத்தில் இருந்து துப்பாக்கி, வெடிகுண்டுகள், கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தப்பி ஓடிய ரவுடி கும்பலை தேடி வந்த நிலையில் பி.எஸ்.பாளையம் அருகே வழுதாவூர் ஏரியில் ரவுடிகள் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு தகவல் தெரியவந்தது. உடனே திருக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அங்கிருந்த கலிதீர்த்தாள் குப்பத்தை சேர்ந்த ரவுடிகள் ராஜேந்திரன் (23), ராஜவேலு (29) ஆகியோரை கைது செய்தனர். ரவுடிகள் தங்க இடம் கொடுத்ததாக நிலத்தின் உரிமையாளர் கலிதீர்த்தாள்குப்பத்தை சேர்ந்த முருகானந்தம் (73) என்பவரும் கைதானார். இவர்கள் 3 பேரும் புதுச்சேரி கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

தலைமறைவாக உள்ள பிரபல ரவுடி ஜனா மற்றும் அவரது கூட்டாளிகளை தொடர்ந்து போலீசார் தேடி வருகிறார்கள்.

Next Story