குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நகலை எரித்து அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டம்


குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நகலை எரித்து அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 Dec 2019 11:00 PM GMT (Updated: 12 Dec 2019 5:49 PM GMT)

திருவாரூரில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நகலை எரித்து திரு.வி.க. அரசு கல்லூரி மாணவ-மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மக்களவை, மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேறியது. இந்த மசோதாவிற்கு நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை திரும்ப பெறக்கோரி திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ஹரிசுர்ஜித் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட துணை செயலாளர் கவிதா, கல்லூரி நிர்வாகிகள் தீனா, மணி, சுர்ஜித் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நகல் எரிப்பு

குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர். அப்போது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், குடியுரிமை சட்ட திருத்த மசோதா நகலை தீவைத்து எரித்தனர்.

திருத்துறைப்பூண்டி

இதேபோல் மத்திய அரசின் புதிய குடியுரிமை சட்ட மசோதாவை ரத்து செய்யக்கோரி அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் திருத்துறைப்பூண்டி பாரதிதாசன் பல்கலைக்கழக கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கோஷங்கள் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் வீரபாண்டியன் தலைமை தாங்கினார். இதனால் 1 மணி நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story