வெங்காய விலை உயர்வை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்


வெங்காய விலை உயர்வை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 Dec 2019 10:30 PM GMT (Updated: 12 Dec 2019 6:27 PM GMT)

வெங்காய விலை உயர்வை கண்டித்து மேலப்பாளையத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நெல்லை,

சமையல் பயன்பாட்டுக்கு தவிர்க்க முடியாத அத்தியாவசிய பொருளாக வெங்காயம் உள்ளது. அதன் விலை விண்ணை தொட்டு வருகிறது. பல்லாரி ஒரு கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சின்ன வெங்காயம் ரூ.130 முதல் ரூ.180 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த விலை உயர்வு பொதுமக்களுக்கு பெரும் பொருளாதார சுமையை ஏற்படுத்துகிறது. வெங்காயத்தின் விலை உயர்வை கண்டித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மகளிர் அமைப்பு சார்பில் மேலப்பாளையத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

மகளிர் அணி தலைவி மும்தாஜ் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரினோஸ், துணை தலைவர் அனீஸ் பாத்திமா, மாவட்ட பொதுச்செயலாளர் பீர்மஸ்தான், செயலாளர்கள் ஹயாத் முகமது மஜீத், அலாவுதீன், செயற்குழு உறுப்பினர்கள் பீர்பாத்திமா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் ஒருவர் வெங்காய மாலை அணிந்து வந்து இருந்தார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் கூறும் போது, வெங்காய விலை உயர்வு பொது மக்களை மிகவும் பாதித்துள்ளது. குறிப்பாக பெண்களை அதிக அளவு பாதிக்கிறது. இதன் விலை உயர்வை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படியில்லையென்றால் தொடர்ந்து போராட்டம் நடத்துவோம் என்றனர்.

ஆர்ப்பாட்டத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட செயலாளர் கனி, மாநில பேச்சாளர் ஜாபர் அலி உஸ்மானி, பெண்கள் அமைப்பை சேர்ந்த ஜன்னத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story