தஞ்சை மாரியம்மன் கோவிலில் காதுகுத்தும் தொழிலாளி குத்திக்கொலை வாலிபர் கைது


தஞ்சை மாரியம்மன் கோவிலில் காதுகுத்தும் தொழிலாளி குத்திக்கொலை வாலிபர் கைது
x
தினத்தந்தி 12 Dec 2019 11:15 PM GMT (Updated: 12 Dec 2019 6:47 PM GMT)

தஞ்சை மாரியம்மன் கோவிலில் காதுகுத்தும் தொழிலாளி குத்திக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தஞ்சாவூர்,

தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள். மேலும் பக்தர்கள் இந்த கோவிலில் முடிகாணிக்கை செலுத்துவதும், குழந்தைகளுக்கு காதுகுத்துவதும் வழக்கம் ஆகும்.

முடிகாணிக்கை செலுத்தும் இடம் கோவில் அருகே தெப்பக்குளக்கரையில் உள்ளது. இங்கு காதுகுத்தும் தொழிலாளியாக மாரியம்மன்கோவில் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜன்(வயது 80) பணியாற்றி வந்தார்.

இவர் நேற்று மாலை குளத்துக்கு குளிப்பதற்காக நடந்து சென்று கொண்டு இருந்தார். அப்போது பின்னால் வந்த ஒரு வாலிபர் கோவிந்தராஜனை கத்தியால் குத்தினார். இதில் பலத்த காயம் அடைந்த கோவிந்தராஜன் கீழே சாய்ந்தார்.

இது குறித்து தகவல் அறிந்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் மற்றும் பொதுமக்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சு மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

கோவிந்தராஜை கத்தியால் குத்தி விட்டு தப்பி ஓட முயன்ற வாலிபரை போலீசார் மடக்கி பிடித்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கழனியப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அந்த வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் மாரியம்மன் கோவில் தாமரைக்குளக்கரையை சேர்ந்த முருகேசன் மகன் அஜீத்(21) என்பது தெரிய வந்தது. அவர் கோவிந்தராஜனை எதற்காக கத்தியால் குத்தினார்? என்பது குறித்து போலீசார் அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story