பூதலூர் ஒன்றியத்தில் 24 ஆயிரம் ஏக்கர் சம்பா-தாளடி சாகுபடி களை எடுக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம்


பூதலூர் ஒன்றியத்தில் 24 ஆயிரம் ஏக்கர் சம்பா-தாளடி சாகுபடி களை எடுக்கும் பணியில் விவசாயிகள் தீவிரம்
x
தினத்தந்தி 12 Dec 2019 11:00 PM GMT (Updated: 12 Dec 2019 6:52 PM GMT)

பூதலூர் ஒன்றியத்தில் 24 ஆயிரம் ஏக்கரில் சம்பா-தாளடி நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால் களை எடுக்கும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

திருக்காட்டுப்பள்ளி,

மேட்டூர் அணையில் இருந்து போதுமான அளவு தண்ணீர் திறந்து விடப்பட்டதாலும், தொடர்ந்து பெய்த மழையினாலும் பூதலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள அனைத்து ஏரிகளும் நிரம்பி உள்ளன.

தொடர்ந்து பெய்த மழையினால் சம்பா சாகுபடி செய்யப்பட்ட வயல்களில் தண்ணீர் தேங்கி நின்றன. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். தற்போது பூதலூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வெயில் அடித்து வருகிறது. ஆதலால் தண்ணீர் முற்றிலும் வடிந்து விட்டது. இதனால் விவசாயிகள் களை எடுத்தல், மேலுரம் இடுதல் போன்ற பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மருந்து தெளிக்கும் பணி

பூதலூர் ஒன்றியத்தில் 24 ஆயிரத்து 532 ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பூதலூர் வட்டாரத்தில் நெற்பயிர்கள் நன்றாக உள்ளதாக வேளாண்மை துறை அதிகாரிகள் கூறினர்.

இருப்பினும் ஒரு சில இடங்களில் பயிரில் பூச்சி தாக்குதல் தென்படுவதால் விவசாயிகள் பூச்சிக்கொல்லி மருந்துகளை கைத்தெளிப்பான் கொண்டு தெளிக்கும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.


Next Story