தஞ்சை பகுதிகளில், உணவுக்காக குளம்-வயல்களில் நத்தை பிடிக்கும் வாலிபர்கள்


தஞ்சை பகுதிகளில், உணவுக்காக குளம்-வயல்களில் நத்தை பிடிக்கும் வாலிபர்கள்
x
தினத்தந்தி 12 Dec 2019 10:30 PM GMT (Updated: 12 Dec 2019 6:58 PM GMT)

தஞ்சை பகுதிகளில் உணவுக்காகவும், விற்பதற்காகவும் குளம் மற்றும் வயல்களில் நத்தைகளை அதிக அளவில் வாலிபர்கள் பிடித்து வருகிறார்கள்.

தஞ்சாவூர்,

நத்தைகளில் நில நத்தை, கடல் நத்தை என இரு வகை உண்டு. இதில் நில நத்தை என்பது மழை காலங்களில் காடு, ஏரி, குளம் போன்ற தண்ணீர் தேங்கி உள்ள பகுதிகளில் காணப்படும். இந்த வகை நத்தை வி‌‌ஷத்தன்மை அற்றது.

ஆனால் கடல் நத்தைகளில் வி‌‌ஷம் உண்டு என்பார்கள். தஞ்சை மாவட்டத்தில் பெரும்பாலும் நத்தை சாப்பிடும் பழக்கம் அதிக அளவில் உள்ளது.

ஓட்டல்களில் விற்பனை

வயல் மற்றும் நீர்நிலைகளில் கிடைக்கும் நத்தைகளை உயிரோடு பிடித்து வந்து கொதிக்க வைத்த நீரில் சற்று நேரம் போட்டால் நத்தை இறந்து விடும். பிறகு அதன் ஓடுகளை உடைத்து நத்தைகளை தனியாக பிரித்து பின்னர் அதனை வேகவைத்து சாப்பிடுவார்கள்.

இன்று சில பகுதிகளில் நத்தைகறி ஸ்பெ‌‌ஷல் என ஓட்டல்களில் போட்டு விற்பனை செய்வதை கூட நாம் பார்த்து இருக்கிறோம்.

அதிக அளவில் காணப்படுகிறது

தஞ்சை மாவட்டம் விவசாயம் நிறைந்த பகுதியாகும். இந்த பகுதிகளில் நீர்நிலைகள் அதிகமாக உள்ளன. இங்கு ஏரி, குளம், குட்டைகள், பாசன வாய்க்கால்கள் அதிகமாக உள்ளன. இதில் நெல் வயல்கள் மற்றும் நீர் நிலைகளில் நத்தைகள் அதிக அளவில் காணப்படும். அந்த நத்தைகளை உணவுக்காக பிடிப்பதோடு மட்டும் இல்லாமல் விற்பதும் உண்டு.

தஞ்சை மீன் மார்க்கெட் பகுதிகளில் நத்தைகள் விற்பனை செய்வது உண்டு. நத்தை மருத்துவ குணம் என்பதால் இதனை அதிக அளவில் வாங்கி செல்கிறார்கள். தஞ்சை-மன்னார்குடி சாலையில் உள்ள காட்டூர், வரவுக்கோட்டை மற்றும் மாரியம்மன ்கோவில், அருள்மொழிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நீர்நிலைகள் அதிகம் உள்ளன. இந்த பகுதிகளில் நத்தைகளும் அதிகமாக காணப்படுகின்றன.

விற்பனை

நல்ல விலை கிடைப்பதால் மகிழ்ச்சியுடன் குளம், வயல் களில் உள்ள நத்தைகளை அந்த பகுதியை சேர்ந்த வாலிபர்கள் அதிக அளவில் பிடித்து வருகிறார்கள். ஆங்காங்கே வயல்வெளிகளில் காணப்படும் நீர் நிலைகளிலும் நத்தைகளை் பிடித்து வருகிறார்கள். சிலர் நத்தைகளை பிடித்து சாலை ஓரத்திலேயே வைத்து விற்பனை செய்து வருகிறார்கள்.

கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரை விற்பனை செய்கிறார்கள். பெரும்பாலானவர்கள் குழம்பு வைப்பதற்காக பிடித்து செல்கிறார்கள். தற்போது இந்த பகுதிகளில் ஆங்காங்கே நத்தைகள் பிடிப்பதை காணமுடிகிறது.

தனி மவுசு உண்டு

இது குறித்து நத்தைகளை பிடித்து விற்பனை செய்பவர்கள் கூறுகையில், ‘‘நத்தைகள் பெரும்பாலும் குளம், வயல்வெளிகள், பாசன வாய்க்கால் பகுதிகளில் அதிக அளவில் காணப்படும். தற்போது வடகிழக்குப்பருவமழை தொடர்ந்து பெய்ததால் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. இதனால் நத்தைகளும் அதிக அளவில் தென்படுகின்றன.

ஆனால் குளங்களில் மீன் வளர்ப்பதற்காக ரசாயனம் கலந்த உணவு வகைகள் போடுவதால் நத்தைகளை அங்கு பார்க்க முடியவில்லை. விவசாய நிலங்கள் மற்றும் நீர் நிலைகளில் தான் அதிகமாக காணப்படுகின்றன. நத்தை எளிதில் கிடைக்காது என்பதால் இதற்கு தனி மவுசு உண்டு. நத்தை விரும்பி உண்பவர்கள் அதற்கு அடிமையாகி விடுவார்கள்’’ என்றனர்.

Next Story