உள்ளாட்சி தேர்தலில் தலைவர்-கவுன்சிலர் பதவிகள் ஏலம் விடப்படுவதாக புகார்கள் வரப்பெற்றால் கடும் நடவடிக்கை


உள்ளாட்சி தேர்தலில் தலைவர்-கவுன்சிலர் பதவிகள் ஏலம் விடப்படுவதாக புகார்கள் வரப்பெற்றால் கடும் நடவடிக்கை
x
தினத்தந்தி 12 Dec 2019 11:00 PM GMT (Updated: 12 Dec 2019 7:30 PM GMT)

உள்ளாட்சி தேர்தலில் தலைவர் மற்றும் கவுன்சிலர் பதவிகள் ஏலம் விடப்படுவதாக புகார்கள் வரப்பெற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் உமா மகேஸ்வரி எச்ச ரிக்கை விடுத்துள்ளார்.

புதுக்கோட்டை,

மாநில தேர்தல் ஆணையத்தால் உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெற உள்ளது. தொடர்ந்து வருகிற 2-ந் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்திடும் வகையில், தேர்தல் தொடர்பான பணிகள் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகளின்படி நடைபெற்று வருகிறது. இதையொட்டி புதுக்கோட்டை அரசு மகளிர் கலை கல்லூரியில் அமையப்பெற உள்ள மாவட்ட ஊராட்சி வார்டு எண் 7 மற்றும் 8 புதுக்கோட்டைக்கான வாக்கு எண்ணும் மையத்தை கலெக்டர் உமா மகேஸ்வரி ஆய்வு செய்தார்.

அப்போது அவர் வாக்கு எண்ணும் மையத்தில் வாக்கு எண்ணிக்கைக்கு தேவையான பொருட்கள் வைப்பறை, வாக்கு எண்ணும் அறை, வாக்கு பெட்டிகள் சேமிப்பு அறை உள்ளிட்டவைகள் மற்றும் வாக்கு எண்ணிக்கையை பாதுகாப்பாக நடத்துவதற்கு மேற்கொள்ளப்படவுள்ள பணிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. பின்னர் கலெக்டர் உமா மகேஸ்வரி நிருபர்களிடம் கூறுகையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியங்களிலும் வாக்கு எண்ணும் மையங்கள் அமையப்பெற உள்ளது.

ஏலம் விட்டால் கடும் நடவடிக்கை

இம்மையங்களுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் தலைவர், கவுன்சிலர் பதவிகள் ஏலம் விடப்பட்டால், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் 2 ஊராட்சிகளில் ஏலம் விடப்பட்டு உள்ளதாக புகார் வந்துள்ளது. இது தொடர்பாக அதிகாரிகள் அனுப்பி விசாரணை மேற்கொள்ளப்படும். விசாரணையின் முடிவில் ஏலம்விடப்பட்டது உறுதிசெய்யப்பட்டால், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, வருங்காலங்களில் தேர்தலில் போட்டியிட முடியாதவாறு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நாளை (சனிக்கிழமை) வேட்பு மனுக்கள்பெறப்பட மாட்டாது என்று முதலில் தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது நாளை பொது விடுமுறை இல்லை என்பதால் அனைத்து ஊரக உள்ளாட்சி தேர்தல்களுக்கான தேர்தல் நடத்தும் அலுவலர்களும் வேட்புமனுக்களை பெறுவதற்காக அவர்களது அலுவலகத்தில் இருக்க வேண்டும் என மாநில தேர்தல் ஆணையம் கேட்டு கொண்டுள்ளது. எனவே வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்யலாம் என்றார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் காளிதாசன் உள்பட அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

Next Story