`காவலன்' செயலி குறித்து மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது


`காவலன் செயலி குறித்து மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது
x
தினத்தந்தி 12 Dec 2019 10:30 PM GMT (Updated: 12 Dec 2019 7:33 PM GMT)

காவலன் செயலி குறித்து மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது என புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் தெரிவித்து உள்ளார்.

புதுக்கோட்டை,

தமிழக காவல்துறை பெண்களுக்கு எதிராக நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுக்கவும், அதில் இருந்து பெண்களை பாதுகாக்கவும் சமீபத்தில் காவலன் என்ற செயலியை உருவாக்கியது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை சார்பில், புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரியில் பயிலும் மாணவிகளுக்கு காவலன் செயலி மற்றும் ஹலோ போலீஸ் செயலி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

இதற்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் சக்திகுமார் தலைமை தாங்கி, காவலன் செயலி என்றால் என்ன?, அதை எவ்வாறு பயன்படுத்த வேண்டும். அதன் நன்மை என்ன என்பதை விளக்கி கூறினார். பின்னர் அனைத்து மாணவிகளின் செல்போனிலும் அந்த செயலியை பதிவிறக்கம் செய்து, அந்த செயலி எவ்வாறு வேலை செய்யும் என்பதையும் செயல் விளக்கத்துடன் செய்து காண்பித்தார். தொடர்ந்து மாணவிகளும் அந்த செயலியை ஆர்வத்துடன் தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்தனர்.

பெண்களை பாதுகாக்க

பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவலன் மற்றும் ஹலோ போலீஸ் செயலி பெண்களை பாதுகாக்க தமிழக காவல்துறை சார்பில் உருவாக்கப்பட்டது. இந்த செயலி எஸ்.ஓ.எஸ். என்ற முறைப்படி ஒரு தடவை அதை கிளிக் செய்தால் அடுத்த நொடியே போலீசாரிடம் இருந்து அழைப்பு வரும். இதை அனைவரும் பயன்படுத்த வேண்டும். இந்த செயலி குறித்து மாவட்டம் முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நடைபெறாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குற்ற செயல்கள் நடைபெறாமல் இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் குழந்தைகளின் ஆபாச படங்கள் பார்ப்பவர்கள் மற்றும் பகிர்பவர்கள் குறித்து ரகசியமாக விசாரிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது. இது தொடர்பான புகார்கள் இதுவரை வரவில்லை. இது போன்றவர்கள் கண்டறியப்பட்டால் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story