நெற்பயிர்களில் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி? - கலெக்டர் சந்தீப்நந்தூரி விளக்கம்


நெற்பயிர்களில் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி? - கலெக்டர் சந்தீப்நந்தூரி விளக்கம்
x
தினத்தந்தி 12 Dec 2019 11:00 PM GMT (Updated: 12 Dec 2019 7:35 PM GMT)

தூத்துக்குடி மாவட்டத்தில் நெற்பயிர்களில் ஆனைக்கொம்பன் ஈ தாக்குதலை கட்டுப்படுத்துவது எப்படி? என்று மாவட்ட கலெக்டர் சந்தீப்நந்தூரி விளக்கம் அளித்து உள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது;-

தூத்துக்குடி, 

இந்த பூச்சியானது மஞ்சள் கலந்த பழுப்பு அல்லது இளஞ்சிவப்பு நிறமாகவும், கொசுவை போல சிறியதாகவும், நீண்ட மெல்லிய கால்களுடன் இருக்கும். இதன் வாழ்க்கை சுழற்சியானது 14-21 நாட்கள். இந்த ஈ தாக்குதலினால் நெற்பயிரில் தூர்களுக்கு பதிலாக கொம்பு போன்ற கிளைகள் வெண்மை நிறத்திலோ அல்லது இளஞ்சிவப்பு நிறத்திலோ வெங்காய இலையைப்போல் தோன்றும். பார்ப்பதற்கு யானையின் கொம்பை போன்ற தோற்றம் இருக்கும்.

தாய் ஈக்கள் சராசரியாக 100 முதல் 150 முட்டைகள் வரை இலைகள், தாள்களின் மேல்புறம் இடும். இதிலிருந்து வரும் புழுக்கள் நெற்பயிர்களின் குருத்துகளை துளைத்து குழல்களாக மாற்றிவிடும். இதனால் பயிரின் தூர்களில் நெற்கதிர்கள் உருவாகாமல் விவசாயிகளுக்கு மகசூல் இழப்பு ஏற்படும். நெல் நடவு செய்த 35 முதல் 45 நாட்களில் இந்த பூச்சியின் தாக்கம் அதிகம் காணப்படும்.

இந்த ஈ தாக்குதலில் இருந்து நெற்பயிர்களை பாதுகாக்க, நெல் வயலில் களைகள் இல்லாமல் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். விளக்குப் பொறிகளை வைத்து பூச்சிகளை கவர்ந்து அழிக்கலாம். பரிந்துரைக்கப்பட்ட அளவுக்கு மேல் தழைச்சத்து உரங்களைப் பயன்படுத்தக் கூடாது. பரிந்துரைக்கப்பட்ட அளவு பொட்டாஷ் உரத்தினை இட வேண்டும்.

ஆனைக்கொம்பனின் இயற்கை எதிரிகளான நீளதாடை சிலந்தி, ஊசித்தட்டான் குளவி போன்றவற்றை அழியாமல் பாதுகாக்க வேண்டும். 10 சதவீதத்துக்கும் மேல் தாக்குதல் தென்பட்டால், ராசாயன கொல்லி மருந்துகளான கார்போசல்பான் 25 சதவீதம் இ.சி.400 மில்லி லிட்டர் அல்லது பிப்ரோனில் 5 சதவீதம் எஸ்.சி. 500 மில்லி லிட்டர் அல்லது பிப்ரோனில் 0.3 சதவீதம் ஜி 10 கிலோ அல்லது குளோர்பைரிபாஸ் 20 சதவீதம் இ.சி. 500 மில்லி லிட்டர் அல்லது பாசலோன் 35 சதவீதம் இ.சி.600 மில்லி லிட்டர் அல்லது தயோமீதாக்ஸம் 25 சதவீதம் டபிள்யு.ஜி.40 கிராம் என இதில் ஏதாவது ஒரு மருந்தை ஒரு ஏக்கருக்கு 200 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். இதன் மூலம் அதனை கட்டுப்படுத்தலாம்.

விவசாயிகள் மேலும் விவரங்களுக்கு தங்கள் பகுதிகளில் உள்ள வேளாண் உதவி அலுவலர் அல்லது வேளாண் அலுவலரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Next Story