எட்டயபுரத்தில் தெப்பக்குளத்தில் குதித்து முதியவர் தற்கொலை
எட்டயபுரத்தில் குடும்ப பிரச்சினையால் தெப்பக்குளத்தில் குதித்து முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.
எட்டயபுரம்,
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் தெற்கு சேனையர் தெருவைச் சேர்ந்தவர் முனியசாமி (வயது 65). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி பத்மா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். முனியசாமி தன்னுடைய குடும்பத்தினருடன் மதுரையில் வசித்து வந்தார்.
இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் முனியசாமி கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான எட்டயபுரத்தில் உள்ள தன்னுடைய அக்காளின் வீட்டுக்கு தனியாக வந்தார். பின்னர் அவர் நேற்று முன்தினம் மாலையில் மதுரைக்கு திரும்பி செல்வதாக உறவினர்களிடம் கூறிச் சென்றார்.
ஆனால் அவர் எட்டயபுரம் நகர பஞ்சாயத்து அலுவலகம் அருகில் உள்ள தெப்பக்குளத்துக்கு சென்றார். தற்போது பெய்த மழையில் தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரம்பி உள்ளது. அவர், அந்த தெப்பக்குளத்தில் திடீரென குதித்து தற்கொலை செய்து கொண்டார். நேற்று காலையில் அவரது உடல் தெப்பக்குளத்தில் பிணமாக மிதந்தது.
இதனைப்பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து, எட்டயபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து சென்று, தெப்பக்குளத்தில் குதித்து தற்கொலை செய்த முனியசாமியின் உடலைக் கைப்பற்றி பரிசோதனைக்காக எட்டயபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குடும்ப பிரச்சினை காரணமாக தெப்பக்குளத்தில் குதித்து முதியவர் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story