மாற்றுவழித்தடத்தில் இயக்கப்படும் ரெயில்களை மீண்டும் ஈரோடு வழியாக விடக்கோரி காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
மாற்றுவழித்தடத்தில் இயக்கப்படும் ரெயில்களை மீண்டும் ஈரோடு வழியாக விடக்கோரி காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
ஈரோடு,
மும்பையில் இருந்து நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலும், நெல்லையில் இருந்து தாதர் செல்லும் சாளுக்கியா எக்ஸ்பிரஸ் ரெயிலும் ஈரோடு வழியாக இயக்கப்பட்டு வந்தன. இந்த ரெயில்கள் சேலம்-நாமக்கல்-கரூர் வழித்தடத்தில் திருப்பி விடப்பட்டு உள்ளன. இதன் காரணமாக ஈரோட்டில் இருந்து மும்பை செல்லும் பயணிகளும், தென் மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளும் மிகவும் சிரமப்படுகிறார்கள்.
ஏற்கனவே உள்ள பழைய வழித்தடமான சேலம்-ஈரோடு-கரூர் வழியாக இயக்க வேண்டும் என்று ஈரோடு மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். மேலும், இந்த வழித்தட மாற்றத்துக்கு அரசியல் கட்சியினர் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
இந்தநிலையில் ரெயில்வே துறையை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஈரோட்டில் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை பிரிவு சார்பில் காளைமாட்டு சிலை பகுதியில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் ஜெ.சுரேஷ் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் கே.என்.பாஷா, பொதுச்செயலாளர் எம்.முகமது அர்ஷத், தெற்கு மாவட்ட தலைவர் வினோத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் கட்சியின் ஈரோடு மாநகர் மாவட்ட தலைவர் ஈ.பி.ரவி கலந்துகொண்டு பேசினார்.
நாகர்கோவில்-மும்பை, நெல்லை-தாதர் ஆகிய எக்ஸ்பிரஸ் ரெயில்களை இருமார்க்கமும் ஈரோடு வழியாக மீண்டும் இயக்க வேண்டும். அடுத்தகட்டமாக மயிலாடுதுறை-மைசூர், தூத்துக்குடி-மைசூர் ஆகிய எக்ஸ்பிரஸ் ரெயில்களை இருமார்க்கமும் நாமக்கல் வழியாக இயக்க உள்ள முடிவை ரெயில்வே நிர்வாகம் கைவிட வேண்டும் ஆகிய கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு கோஷம் எழுப்பப்பட்டது. மேலும், இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களும் வினியோகம் செய்யப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர் பெரியசாமி, மண்டல தலைவர்கள் அயூப்அலி, விவேகானந்தன், ஜாபர்சாதிக், மாவட்ட துணைத்தலைவர்கள் செல்லகுமாரசாமி, ராஜேஷ் ராஜப்பா, கோதண்டபாணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story