காட்பாடியை சேர்ந்த பள்ளி மாணவிக்கு கட்டாய திருமணம் - விருந்துக்கு வந்தபோது அதிகாரிகள் மீட்டனர்


காட்பாடியை சேர்ந்த பள்ளி மாணவிக்கு கட்டாய திருமணம் - விருந்துக்கு வந்தபோது அதிகாரிகள் மீட்டனர்
x
தினத்தந்தி 12 Dec 2019 10:45 PM GMT (Updated: 12 Dec 2019 7:35 PM GMT)

காட்பாடியை சேர்ந்த பள்ளி மாணவிக்கு உறவினரின் மகனுடன் சித்தூரில் கட்டாய திருமணம் நடந்தது. விருந்துக்கு வீட்டிற்கு வந்தபோது அந்த மாணவியை அதிகாரிகள் மீட்டு அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

காட்பாடி, 

காட்பாடியில் உள்ள ஒரு பகுதியை சேர்ந்தவர் 12 வயது சிறுமி. அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தார். இந்த மாணவியின் சகோதரிக்கும் ஆந்திரமாநிலம் சித்தூர் மாவட்டம் கடப்பகுண்டா கிராமத்தை சேர்ந்த உறவினரின் 30 வயது மகனுக்கும் திருமணம் செய்ய பேச்சுவார்த்தை நடந்தது. முதற்கட்டமாக ஜோதிடரிடம் கொடுத்து இருவரின் ஜாதகமும் பார்க்கப்பட்டது. அதில், பெண்ணின் ஜாதகம் உறவினர் மகனின் ஜாதகத்துடன் ஒத்துபோகவில்லை.

அதைத்தொடர்ந்து தங்கையான பள்ளி மாணவியின் ஜாதகத்தை பார்த்தனர். இருவரின் ஜாதகப்பொருத்தமும் சரியாக இருந்தது. அதைத்தொடர்ந்து மாணவியை உறவினரின் மகனுக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் முடிவு செய்தனர். ஆனால் மாணவி நான் படிக்க வேண்டும் என்று கூறி திருமணத்துக்கு மறுத்துள்ளார். அதற்கு அவரின் தாயார் நீ திருமணம் செய்து கொள்ளவில்லை என்றால் நான் இறந்து விடுவேன் என்று மிரட்டி உள்ளார். இதையடுத்து கடந்த 6-ந் தேதி மாணவிக்கும், உறவினர் மகனுக்கும் கடப்பாகுண்டாவில் உள்ள அவருடைய வீட்டில் நெருங்கிய உறவினர்கள் முன்னிலையில் திருமணம் நடந்தது.

இந்த நிலையில் கடந்த 8-ந் தேதி மாணவியும், திருமணம் செய்த வாலிபரும் விருந்துக்காக காட்பாடியில் உள்ள மாணவியின் வீட்டிற்கு வந்தனர். 9-ந் தேதி மாணவி தாலியை கழட்டி வைத்து விட்டு பள்ளிக்கு சென்றுள்ளார். இதற்கிடையே மாணவிக்கு கட்டாய திருமணம் நடந்தது குறித்து குழந்தைகள் நல மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தேவேந்திரனுக்கு தகவல் வந்தது. அதன்பேரில் குழந்தைகள் நல உறுப்பினர் மணிசேகர், காட்பாடி சமூகநல அலுவலர் எஸ்தர்ராணி மற்றும் விருதம்பட்டு போலீசார் மாணவியின் வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது மாணவிக்கு கட்டாய திருமணம் நடந்தது உறுதியானது.

இதையடுத்து அந்த மாணவியை அதிகாரிகள் உடனடியாக மீட்டு நேற்று முன்தினம் இரவு வேலூர் கலெக்டர் சண்முகசுந்தரம் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இந்த சம்பவம் தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி கலெக்டர் உத்தரவிட்டார். அதன்பேரில் மாணவியை வேலூர் அல்லாபுரத்தில் உள்ள அரசு பெண்கள் பிற்காப்பு இல்லத்தில் அதிகாரிகள் சேர்த்தனர். மேலும் மாணவிக்கு மருத்துவ பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாணவியின் கட்டாய திருமணத்துக்கு உடந்தையாக இருந்த அவரின் பெற்றோர், திருமணம் செய்த வாலிபர் மற்றும் அவரின் பெற்றோர் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேலூர் மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் முருகேஸ்வரி, சித்தூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு பரிந்துரை செய்து கடிதம் அனுப்பி உள்ளார்.

பள்ளி மாணவிக்கு கட்டாய திருமணம் நடந்த சம்பவம் காட்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story