உள்ளாட்சி தேர்தலை அமைதியான முறையில் நடத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் கலெக்டர் பேச்சு


உள்ளாட்சி தேர்தலை அமைதியான முறையில் நடத்த ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் கலெக்டர் பேச்சு
x
தினத்தந்தி 12 Dec 2019 11:00 PM GMT (Updated: 12 Dec 2019 8:50 PM GMT)

தர்மபுரி மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை அமைதியான முறையில் நடத்த அனைத்து அரசியல் கட்சியினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று தர்மபுரியில் நடந்த ஆலோசனைக்கூட்டத்தில் கலெக்டர் மலர்விழி பேசினார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 27-ந்தேதி மற்றும் 30-ந்தேதி ஆகிய 2 நாட்களில் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுதாக்கல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்ற ஆலோசனைக்கூட்டம் தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் மலர்விழி தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன், மாவட்ட வருவாய் அலுவலர்கள் ரகமத்துல்லாகான், சங்கர், உதவி கலெக்டர் பிரதாப், ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ஆர்த்தி, கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைபதிவாளர் ராமதாஸ், மாவட்ட வழங்கல் அலுவலர் தணிகாசலம் உள்பட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் முன்னிலை வகித்தனர். இந்தகூட்டத்தில் அனைத்து அரசியல் கட்சிகளை சேர்ந்த பிரமுகர்கள் பங்கேற்று உள்ளாட்சி தேர்தல் தொடர்பான நடத்தை விதிகள் குறித்து கேட்டறிந்தனர்.

இந்த கூட்டத்தில் கலெக்டர் மலர்விழி பேசியதாவது:-

புகார் தெரிவிக்கலாம்

தர்மபுரி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தலை விதிமுறைகளின்படி நேர்மையாகவும், அமைதியான முறையிலும் நடத்த தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் உரிய ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். மாவட்டத்தில் எந்த பகுதியிலாவது தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறப்பட்டால் அதுதொடர்பாக கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக புகார் தெரிவிக்கலாம்.

இதேபோல் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு தேர்தல் பிரசாரத்திற்கு விதிமுறைகளின்படி விண்ணப்பித்து அனுமதியை பெறலாம். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் பிரசார அனுமதி வழங்கப்படும். அரசியல் கட்சியினர் தங்கள் கட்சி கொடிக்கம்பங்களை அகற்ற வேண்டும். மாவட்டம் முழுவதும் பதற்றமான வாக்குச்சாவடிகள் அடையாளம் காணப்பட்டு உள்ளன. இவற்றில் உரிய பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும். இவ்வாறு கலெக்டர் பேசினார்.

Next Story