தானே அருகே சிறுமியை கொன்று உடல் காட்டுப்பகுதியில் வீச்சு: உறவுக்கார பெண் உள்பட - 2 பேர் கைது


தானே அருகே சிறுமியை கொன்று உடல் காட்டுப்பகுதியில் வீச்சு: உறவுக்கார பெண் உள்பட - 2 பேர் கைது
x
தினத்தந்தி 12 Dec 2019 10:00 PM GMT (Updated: 12 Dec 2019 8:54 PM GMT)

சிறுமியை கொன்று உடலை காட்டுப்பகுதியில் வீசிய உறவுக்கார பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான ஒருவரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

தானே,

அவுரங்காபாத்தில் பெற்றோருடன் வசித்து வந்த 9 வயது சிறுமி பாரதி. கடந்த ஆண்டு சிறுமியின் தந்தை உயிரிழந்தார். இதனால் குடும்ப வறுமையால் மகள் பாரதியை மேற்கொண்டு படிக்க வைக்க முடியாமல், அவளது தாய் மிகவும் சிரமப்பட்டு வந்தார்.

இந்தநிலையில் தானே உத்தன்சாகரி பகுதியை சேர்ந்த சிறுமியின் உறவினர் பிரகாஷ் மற்றும் அவரது மனைவி அனிதா ஆகியோர் உங்கள் மகளை தானேயில் உள்ள பள்ளியில் சேர்த்து தாங்கள் படிக்க வைப்பதாக கூறி, பாரதியை தங்களுடன் அழைத்து சென்றனர். ஆனால் அவர்கள் சிறுமி பாரதியை பள்ளிக்கூடத்தில் சேர்க்காமல் தங்கள் வீட்டில் உள்ள வேலைகளை செய்ய ஈடுபடுத்தினர்.

சிறுமி பாரதிக்கு படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் இருந்து வந்தது. இதனால் அவள் அடிக்கடி படுக்கையில் சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சம்பவத்தன்று இரவும் படுக்கையில் பாரதி சிறுநீர் கழித்ததாக தெரிகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ் மற்றும் அவரது மனைவி அனிதா ஆகியோர் சேர்ந்து சிறுமியை அடித்து, உதைத்து உள்ளனர். மேலும் அவளின் கழுத்தை நெரித்து உள்ளனர். இதில் சிறுமி பாரதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாள். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் சிறுமியின் உடலை வீட்டில் உள்ள பிளாஸ்டிக் தொட்டியில் போட்டு வைத்தனர். பின்னர், உடல் துர்நாற்றம் வீசாமல் இருக்க மேலே சிமெண்ட் கலவையை போட்டு மூடினர்.

பின்னர் கேட் தாலுகாவில் வசிக்கும் உறவினர் ஆகாஷ் சவான் என்பவர் உதவியுடன் சிறுமியின் உடலை டெம்போவில் கொண்டு சென்று கசாரா காட்டுப்பகுதியில் வீசிவிட்டு தலைமறைவாகி விட்டனர்.

இதற்கிடையே சிறுமியின் தாய் மகளை தொடர்பு கொள்ள முடியாததால் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார்.

இந்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, பிரகாஷின் வீட்டிற்கு விசாரிக்க சென்றனர். அப்போது, அவர் குடும்பத்துடன் தலைமறைவானது தெரியவந்தது. இதையடுத்து அவரது செல்போன் எண்ணை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், அவர் கேட் தாலுகாவில் இருப்பதாக தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்றனர். அப்போது, அங்கு அனிதாவும், ஆகாஷ் சவானும் மட்டும் இருந்தனர்.

அவர்களிடம் சிறுமி பாரதி குறித்து கேட்டபோது, முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தனர். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை மேற்கொண்டனர். இதில், சிறுமியை கொலை செய்து, கசாரா காட்டுப்பகுதியில் வீசிய மேற்கண்ட விவரங்கள் தெரியவந்தன. இதையடுத்து போலீசார் அனிதாவையும், ஆகாஷ் சவானையும் கைது செய்தனர். மேலும் தலைமறைவான பிரகாசை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

இதற்கிடையே போலீசார் கசாரா காட்டுப்பகுதியில் பிளாஸ்டிக் தொட்டியில் கிடந்த சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

Next Story