சரத்பவாருக்கு 79-வது பிறந்தநாள் - உத்தவ் தாக்கரே வாழ்த்து


சரத்பவாருக்கு 79-வது பிறந்தநாள் - உத்தவ் தாக்கரே வாழ்த்து
x
தினத்தந்தி 12 Dec 2019 11:15 PM GMT (Updated: 12 Dec 2019 9:11 PM GMT)

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரின் 79-வது பிறந்தநாளான நேற்று அவருக்கு உத்தவ் தாக்கரே உள்பட பலர் வாழ்த்து தெரிவித்தனர்.

மும்பை,

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நிறுவன தலைவரும், முன்னாள் மந்திய மந்திரியுமான சரத்பவார் நேற்று 79 வயதை அடைந்தார்.

மராட்டிய மூத்த அரசியல்வாதிகளில் ஒருவரான அவருக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றன. பல்வேறு கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

மேலும் ஒய்.பி. சவான் மையத்தில் நடந்த பிறந்த நாள் விழாவில் ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர்.

விழாவில் சரத்பவார் பேசுகையில், “சமுதாயத்தின் கடைசி நபரின் முன்னேற்றத்திற்காக உழைக்க நாம் கடமை பட்டுள்ளோம். அவர்களுக்காக நாம் உழைக்க வேண்டும்” என்றார்.

மேலும் கட்சியினர் ரூ.80 லட்சத்திற்கான காசோலையை சரத்பவாரிடம் பரிசாக வழங்கினர். இந்த பணம் தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குழந்தைகளின் படிப்பு செலவுக்கு பயன்படுத்தப்படும் என சரத்பவார் கூறினார்.

இந்நிகழ்ச்சியில் தேசியவாத காங்கிரசை சேர்ந்த மந்திரிகள் ஜெயந்த் பாட்டீல், சகன் புஜ்பால் மற்றும் மூத்த தலைவர்கள் பிரபுல் படேல், அஜித் பவார், தனஞ்செய் முண்டே, சிவசேனா தலைவரும், மந்திரியுமான சுபாஷ் தேசாய் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக சரத்பவாரின் மகளும், எம்.பி.யுமான சுப்ரியா சுலே தனது தந்தைக்கு வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “ அன்புள்ள அப்பா, நீங்கள் எனது நிலையான ஆதாரமாக விளங்குகிறீர்கள். உங்களுக்கு எல்லையற்ற பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் நீண்ட ஆரோக்கியத்துடன் வாழவேண்டும்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

இதேபோல் சரத்பவாருக்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவும் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது வாழ்த்து செய்தியில் சரத்பவாரை ‘வழிகாட்டி’ என புகழ்ந்துள்ளார். மேலும் அவரின் நீண்ட ஆரோக்கிய வாழ்க்கைக்காக பிரார்த்தனை செய்வதாக கூறி உள்ளார். இதேபோல் மறைந்த பாரதீய ஜனதா தலைவர் கோபிநாத் முண்டேவுக்கும் நேற்று பிறந்தநாள் கொண்டாடப்பட்டது. அதையும் உத்தவ் தாக்கரே நினைவுகூர்ந்தார்.

Next Story