பெரியபாளையம் அருகே அதிகாரிகளை கண்டித்து நூதன போராட்டம்


பெரியபாளையம் அருகே அதிகாரிகளை கண்டித்து நூதன போராட்டம்
x
தினத்தந்தி 12 Dec 2019 10:12 PM GMT (Updated: 12 Dec 2019 10:12 PM GMT)

பெரியபாளையம் அருகே அதிகாரிகளை கண்டித்து பாய் போட்டு தூங்கும் நூதன போராட்டம் நடந்தது.

பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம் பெரியபாளையத்தை அடுத்த வெங்கல் கிராமத்தில் இருந்து சீத்தஞ்சேரி நோக்கி செல்லும் நெடுஞ்சாலையில் வென்றான் குளம் எனப்படும் சொர்க்கபுரி மேம்பாலம் அருகே சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து திருவள்ளூர் கோட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு பலமுறை புகார் மனுக்கள் அளித்தும் சாலை சீரமைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

பாய் போட்டு தூங்கும் போராட்டம்

இதனால் நெடுஞ்சாலை துறை அதிகாரிகளை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஆவாஜிப்பேட்டை கிளைச் செயலாளர் சோலை தலைமையில் வென்றான்குளம் மேம்பாலம் அருகே பாய் போட்டு தூங்கும் நூதன போராட்டம் நேற்று நடைபெற்றது. இது குறித்து தகவலறிந்து பெரியபாளையம் மற்றும் வெங்கல் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள், சாலையை சீரமைக்க வேண்டும். ஆவாஜிப்பேட்டை கிராமத்திற்காக அமைக்கப்பட்டிருந்த வழிகாட்டி பலகையை வனத்துறையினர் அகற்றியதற்கு கண்டனம் தெரிவித்தனர். அந்த பகுதியில் மீண்டும் வழிகாட்டி பலகை அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். வெங்கல்-சீத்தஞ்சேரி நெடுஞ்சாலையில் ஆவாஜிப்பேட்டை, மாளந்தூர், கல்பட்டு, ஆலந்தூர் போன்ற ஊர்களுக்கு செல்லும் சாலை அருகே வேகத்தடை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

பேச்சுவார்த்தை

திருவள்ளூரில் இருந்து விரைந்து வந்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், கோரிக்கைகளின் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதனை ஏற்று அனைவரும் அமைதியாக கலைந்து சென்றனர். இந்த பிரச்சினையால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.

இந்த போராட்டத்தில் வட்டச் செயலாளர் கண்ணன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் ரவி, பாலாஜி, கங்காதரன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story