வேலைக்கு சேர்ந்த முதல் நாளே ஓட்டல் அதிபரின் காரை கடத்தி சென்ற டிரைவர் கைது 2 மணி நேரத்தில் போலீசாரிடம் சிக்கினார்


வேலைக்கு சேர்ந்த முதல் நாளே ஓட்டல் அதிபரின் காரை கடத்தி சென்ற டிரைவர் கைது 2 மணி நேரத்தில் போலீசாரிடம் சிக்கினார்
x
தினத்தந்தி 12 Dec 2019 10:15 PM GMT (Updated: 12 Dec 2019 10:15 PM GMT)

வடபழனியில் வேலைக்கு சேர்ந்த முதல் நாளே ஓட்டல் அதிபரின் காரை கடத்தி சென்ற டிரைவர் கைது செய்யப்பட்டார். கடத்தப்பட்ட 2 மணி நேரத்தில் போலீசாரிடம் காருடன் சிக்கினார்.

பூந்தமல்லி,

ராயப்பேட்டை, அவ்வை சண்முகம் சாலை பகுதியை சேர்ந்தவர் வாசுதேவன் (வயது 63). இவர் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஓட்டல் நடத்தி வருகிறார். ஓட்டல் அதிபரான இவர், நேற்று முன்தினம் இரவு வடபழனியில் உள்ள தனியார் வணிக வளாகத்திற்கு தனது காரில் வந்தார். காரை டிரைவர் கார்த்திக் (27) என்பவர் ஓட்டி வந்தார்.

இந்தநிலையில் வணிகவளாகத்தில் வாசுதேவன் வந்து இறங்கியதும், காரை ’பார்க்கிங்’ பகுதியில் நிறுத்திவிட்டு வருமாறு டிரைவர் கார்த்திக்கிடம் கூறினார். இதையடுத்து, காரை எடுத்து சென்ற கார்த்திக் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை.

இதையடுத்து டிரைவர் கார்த்திக் செல்போனுக்கு வாசுதேவன் தொடர்பு கொண்டபோது, செல்போன் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதனால் கார்த்திக் காரை கடத்தி சென்றது தெரியவந்தது அறிந்து வாசுதேவன் அதிர்ச்சி அடைந்தார்.

காரை கடத்தியதாக புகார்

இதைத்தொடர்ந்து உடனே வாசுதேவன் வடபழனி போலீஸ் நிலையத்தில், காரை டிரைவர் கார்த்திக் கடத்தி சென்று விட்டதாக புகார் அளித்தார். இதையடுத்து வடபழனி போலீசார் அந்த காரின் எண்ணை வைத்து தீவிரமாக தேடி வந்தநிலையில், காரில் இருந்த வாசுதேவனின் விலை உயர்ந்த ஐபோன் செல்போன் ‘சுவிட்ச் ஆப்’ ஆகாமல் இருந்தால் ஜி.பி.ஆர்.எஸ்., சிக்னல் மூலம் தேடிய நிலையில் கல்பாக்கம் அருகே கார் இருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து, கல்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அங்கு சுற்றித்திரிந்த காரை போலீசார் மடக்கி பிடித்தனர். அதன்பின்னர், வடபழனி போலீசார் இரவே அங்கு சென்று கார்த்திக்கை கைது செய்து, சென்னைக்கு மீட்டு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

போலீசார் விசாரணை

விசாரணையில், நெல்லை மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக் நேற்றுமுன்தினம் தான் வாசுதேவனிடம் டிரைவராக வேலைக்கு சேர்ந்துள்ளார். வாசுதேவன் தனது ஓட்டல்களின் விற்பனை பணத்தை எடுத்துகொண்டு நேற்றுமுன்தினம் இரவு வந்துள்ளார். சம்பவத்தன்று காரில் கைப்பையை வைத்து விட்டு இறங்கியதும், பையில் அதிகளவில் பணம் உள்ளது என எண்ணி கார்த்திக் காரை கடத்தி சென்றுள்ளார். சிறிது தூரம் சென்றபிறகு பையை சோதித்து பார்த்தபோது அதில், ரூ.5 ஆயிரம் மட்டும் தான் இருந்தது தெரியவந்துள்ளது. மேலும் காரில் இருந்த ஐபோனை ‘சுவிட்ச் ஆப்’ செய்ய தெரியாததால் சிக்கிக்கொண்டதும் தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் கார்த்திக்கிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர். கடத்தப்பட்ட கார் 2 மணி நேரத்தில் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Next Story