தேன்கனிக்கோட்டையில் பரபரப்பு: ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி


தேன்கனிக்கோட்டையில் பரபரப்பு: ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி
x
தினத்தந்தி 13 Dec 2019 9:45 PM GMT (Updated: 13 Dec 2019 5:30 PM GMT)

தேன்கனிக்கோட்டையில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து மர்ம நபர்கள் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தேன்கனிக்கோட்டை, 

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் பஸ் நிலையத்தின் உள்ளே தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது. பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் இந்த ஏ.டி.எம். மையத்தில் பணம் எடுத்து பயன்படுத்தி வந்தனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் சிலர் பஸ் நிலையத்திற்கு வந்தனர்.

பின்னர் அவர்கள் அந்த தனியார் ஏ.டி.எம். மையத்திற்குள் நுழைந்தனர். இதைத் தொடர்ந்து அந்த எந்திரத்தை உடைத்து அதில் இருந்த பணத்தை கொள்ளையடிக்க முயற்சி செய்தனர். நீண்ட நேரம் முயற்சி செய்தும் அந்த நபர்களால் எந்திரத்தில் உள்ள பணம் இருக்கும் பாகத்தை உடைக்க முடியவில்லை.

பின்னர் அவர்கள் வேறு வழியின்றி அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதனால் பல லட்சம் ரூபாய் தப்பியது. நேற்று அதிகாலை பஸ் நிலையத்திற்கு வந்த பயணிகள் ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் அவர்கள் இது தொடர்பாக தேன்கனிக்கோட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும், அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ள நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தேன்கனிக்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story