வாக்கு எண்ணிக்கை மையங்களில் வசதிகளை உறுதி செய்து அறிக்கை - அதிகாரிகளுக்கு, கலெக்டர் அறிவுறுத்தல்


வாக்கு எண்ணிக்கை மையங்களில் வசதிகளை உறுதி செய்து அறிக்கை - அதிகாரிகளுக்கு, கலெக்டர் அறிவுறுத்தல்
x
தினத்தந்தி 13 Dec 2019 10:30 PM GMT (Updated: 13 Dec 2019 6:37 PM GMT)

வாக்கு எண்ணிக்கை மையங்களில் வசதிகளை உறுதி செய்து அறிக்கை வழங்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, கலெக்டர் அறிவுறுத்தினார்.

திருச்சி, 

திருச்சி மாவட்டத்தில் உள்ள 14 ஊராட்சி ஒன்றியங்களிலும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய உள்ளாட்சி பதவிகளுக்கு வருகிற 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. வாக்குப்பதிவு முடிந்த பின்னர் வாக்குப்பெட்டிகள் அனைத்தும் வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு கொண்டு செல்லப்படும்.

முசிறி ஊராட்சி ஒன்றியத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுவதற்காக அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி, தா.பேட்டை ஊராட்சி ஒன்றியத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தொட்டியம் ஊராட்சி ஒன்றியத்தில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவற்றில் வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த மையங்களில் போதுமான இடவசதி மற்றும் மின்சார வசதி, கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, போக்குவரத்து வசதி, வாக்குப் பெட்டிகளை பாதுகாப்பாக வைக்கப்படும் அறை, வாக்கு எண்ணிக்கை நடைபெறும் அறை ஆகியவை பாதுகாப்பாக இருக்கிறதா? என்பதை திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

பின்னர் வாக்கு எண்ணிக்கை மையங்களில் உள்ள வசதிகளை தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உறுதி செய்து மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை வழங்கிட வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

ஆய்வின் போது முசிறி வட்டார வளர்ச்சி அதிகாரிகள் மனோகரன், லலிதா, தா.பேட்டை வட்டார வளர்ச்சி அதிகாரிகள் சாமிநாதன், மணிவேல், தொட்டியம் வட்டார வளர்ச்சி அதிகாரிகள் செந்தில்குமார், ரவிச்சந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

Next Story