அடுத்த ஆண்டில், ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து அறிவிப்பார் - சத்திய நாராயணராவ் பேட்டி


அடுத்த ஆண்டில், ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து அறிவிப்பார் - சத்திய நாராயணராவ் பேட்டி
x
தினத்தந்தி 13 Dec 2019 10:00 PM GMT (Updated: 13 Dec 2019 7:16 PM GMT)

நடிகர் ரஜினிகாந்த் அடுத்த ஆண்டு அரசியல் கட்சி தொடங்குவது குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என அவரது அண்ணன் சத்திய நாராயணராவ் கூறினார்.

நாமக்கல், 

நடிகர் ரஜினிகாந்த் பிறந்த நாளான டிசம்பர் 12-ந் தேதி நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நாமக்கல் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் அரங்கண்ணல் தலைமை தாங்கினார்.

இதில் ரஜினிகாந்தின் அண்ணன் சத்திய நாராயணராவ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நேற்று முன்தினம் பிறந்த 3 குழந்தைகளுக்கு மோதிரம் அணிவித்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:-

ரஜினிகாந்த் பிறந்த நாளில் நாமக்கல் அரசு ஆஸ்பத்திரியில் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இதுபோன்ற நலத்திட்ட உதவிகள் தொடர வேண்டும் என இறைவனை பிரார்த்திக்கிறேன். ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்குவது குறித்து அடுத்த ஆண்டு அறிவிப்பு வெளியிடுவார். கூட்டணியா? தனித்தா? என்பதை அவரே தெரிவிப்பார்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு பழம், ரோட்டி, போர்வை போன்றவற்றை சத்திய நாராயணராவ் வழங்கினார். முன்னதாக நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட இணை செயலாளர் அசோகன், துணை செயலாளர் பாயும்புலி மோகன், செயற்குழு உறுப்பினர்கள் கரிகாலன், சுப்பிரமணி, மாவட்ட வக்கீல் அணி செயலாளர் ஹரிராமசந்திரன், நகர செயலாளர் மோகன், துணை செயலாளர் அசோக், நகர செயற்குழு உறுப்பினர்கள் ராஜா வெங்கடே‌‌ஷ், பார்த்தீபன் உள்பட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Next Story