திருச்சியில் தொடரும் வேட்டை: குழந்தைகள் ஆபாச வீடியோ பகிர்வில் தொடர்புடைய 30 பேரிடம் விசாரணை


திருச்சியில் தொடரும் வேட்டை: குழந்தைகள் ஆபாச வீடியோ பகிர்வில் தொடர்புடைய 30 பேரிடம் விசாரணை
x
தினத்தந்தி 13 Dec 2019 11:15 PM GMT (Updated: 13 Dec 2019 7:48 PM GMT)

திருச்சியில் தொடரும் வேட்டையாக குழந்தைகள் ஆபாச வீடியோ பகிர்வில் தொடர்புடைய 30 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருச்சி, 

திருச்சி காஜாபேட்டையை சேர்ந்தவர் கிறிஸ்டோபர் அல்போன்ஸ் (வயது 42). இவர், ‘‘நிலவன், ஆதவன்’’ என்ற புனைப்பெயரில் முகநூல் பக்கம் தொடங்கி, அதில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்கள் மற்றும் படங்களை பார்த்து பதிவேற்றம் செய்த குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். திருச்சி மாநகர சமூக ஊடக பிரிவு போலீஸ்காரர் முத்துப்பாண்டி கொடுத்த புகாரின் பேரில், திருச்சி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட 3 சட்டப்பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிந்து தொடர் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. 

மேலும் கிறிஸ்டோபர் அல்போன்சின் செல்போனை கைப்பற்றி அதில் உள்ள ஐ.பி. முகவரியில் இருந்து அவருடன் தொடர்புடைய நபர்கள் குறித்தும் பட்டியல் சேகரிக்கப்பட்டது. அப்போது 100-க்கும் மேற்பட்டவர்களுக்கு குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பகிர்ந்தது கண்டறியப்பட்டது. அத்துடன் கிறிஸ்டோபர் பயன்படுத்திய மெமரி கார்டு, செல்போனில் உள்ள பதிவுகளை கண்டறிய தடயவியல் ஆய்வுக்காக சென்னைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.

கைதான கிறிஸ்டோபர் அல்போன்ஸ், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியை சேர்ந்த அரசியல் பிரமுகர் ஒருவரிடம் தனிச்செயலாளராக வேலை பார்த்துள்ளதாகவும், அவரது ஒழுங்கீன செயலால் அவர் துரத்திவிடப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் குழந்தைகளை வன்புணர்ச்சி செய்யும் ஆபாச படங்களை தனது முகநூல் தொடர்பில் உள்ள சிறுவர்களுக்கும் அவர் பகிர்ந்து ஓரினச்சேர்க்கையில் ஈடுபடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கலாமா? என்ற சந்தேகமும் போலீசாருக்கு எழுந்துள்ளது. ஏனென்றால், அவர் போலீசில் தொடர்ந்து 4 ஆண்டுகளாக இதுபோன்ற ஆபாச படங்களை பார்ப்பதிலும், அதை பதிவேற்றம் செய்வதிலும் அடிமையாகி விட்டதாக ஒப்புதல் அளித்திருக்கிறார்.

எனவே, போலீசார் கிறிஸ்டோபர் அல்போன்சுடன் முகநூல் தொடர்பில் உள்ளவர்களின் ஐ.பி. முகவரியை தேடிக்கண்டுபிடித்து 100-க்கும் மேற்பட்ட நண்பர்களின் பட்டியலை சேகரித்து அவற்றை திருச்சி மாநகர் மற்றும் புறநகர் பகுதி, சென்னை, செங்கல்பட்டு, கோவை ஆகிய மாவட்ட போலீசாருக்கும் அனுப்பி வைத்துள்ளனர். அந்தந்த மாவட்ட போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த வகையில் திருச்சியில் அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் நண்பர்கள் உள்ளிட்ட 30 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சிலர், தங்களது செல்போன்களை ‘சுவிட்ச்ஆப்’ செய்து விட்டு தலைமறைவாகி விட்டதாகவும் போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

Next Story