6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: கைதானவருக்கு விரைவில் தண்டனை வழங்க கோரி போராட்டம்


6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: கைதானவருக்கு விரைவில் தண்டனை வழங்க கோரி போராட்டம்
x
தினத்தந்தி 13 Dec 2019 10:30 PM GMT (Updated: 13 Dec 2019 9:07 PM GMT)

பெலகாவி அருகே 6 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக கைதான வாலிபருக்கு விரைவில் தண்டனை வழங்க வலியுறுத்தி நேற்று கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பெலகாவி,

பெலகாவி மாவட்டம் காகதி அருகே உள்ள கடோலி கிராமத்தை சேர்ந்தவள் 6 வயது சிறுமி. இவள் கடந்த 11-ந் தேதி வீட்டு அருகே விளையாடி கொண்டிருந்தாள். இந்த வேளையில் அதே கிராமத்தை சேர்ந்த சுனில் பாலநாயக் (வயது 26) என்பவர் சிறுமியை விளையாட அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் காகதி போலீசார் வழக்குப்பதிவு செய்து சுனில் பாலநாயக்கை கைது செய்தனர். நேற்று முன்தினம் அவரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பெலகாவி அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பாலியல் பலாத்கார சம்பவத்தை கண்டித்தும், சுனில் பாலநாயக்கின் தந்தையை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், கைதான சுனில் பாலநாயக்கிற்கு விரைவில் தண்டனை வழங்க கோரியும் நேற்று கடோலி கிராமத்தில் முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி நேற்று கிராமத்தில் உள்ள ஓட்டல்கள், மளிகைக்கடைகள் உள்பட அனைத்து நிறுவனங்களும் மூடப்பட்டு இருந்தன. மேலும் ஆஸ்பத்திரி, மருந்துக்கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன.

மேலும் பலாத்கார வழக்கை விரைந்து விசாரணை நடத்தி விரைவில் தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி கிராம மக்கள் பெலகாவி கலெக்டர் அலுவலகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் நேற்று அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story