திருமணம் முடிந்த மறுநாள்: புதுப்பெண்ணை கத்தியால் குத்திய - முன்னாள் காதலன் கைது


திருமணம் முடிந்த மறுநாள்: புதுப்பெண்ணை கத்தியால் குத்திய - முன்னாள் காதலன் கைது
x
தினத்தந்தி 13 Dec 2019 9:53 PM GMT (Updated: 13 Dec 2019 9:53 PM GMT)

திருமணம் முடிந்த மறுநாள் புதுப்பெண்ணை கத்தியால் குத்திய முன்னாள் காதலனை போலீசார் கைது செய்தனர்.

அம்பர்நாத்,

தானே மாவட்டம் அம்பர்நாத் பகுதியை சேர்ந்த 19 வயது இளம்பெண்ணுக்கு கடந்த புதன்கிழமை திருமணம் நடந்தது. நேற்று முன் தினம் அவர் வீட்டருகே உள்ள பொது கழிவறைக்கு சென்றார். அப்போது, அங்கு வந்த வாலிபர் ஒருவர் புதுப்பெண்ணை சரமாரியாக கத்தியால் குத்தினார். மேலும் தடுக்க சென்ற பெண்ணின் கணவரையும் குத்தினார்.

இதில், அவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. பின்னர் அங்கு இருந்து தப்பிச்சென்றார். கத்திக்குத்து காயமடைந்த புதுப்பெண் சிகிச்சைக்காக அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் புதுப்பெண்ணை கத்தியால் குத்திய வாலிபரை கைது செய்தனர். விசாரணையில், அவர் தானே மாவட்டம் வடோலே கிராமத்தை சேர்ந்த விஷால்(19) என்பது தெரியவந்தது. விஷாலும், இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர்.

இந்தநிலையில் அந்த இளம்பெண் பெற்றோர் பார்த்த மாப்பிள்ளையை திருமணம் செய்து உள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த விஷால் முன்னாள் காதலியை கத்தியால் குத்தியது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

திருமணம் முடிந்த மறுநாள் புதுப்பெண்ணை முன்னாள் காதலன் கத்தியால் குத்திய சம்பவத்தால் அம்பர்நாத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story